Saturday, 29 June 2013

காஷ்மீரி நாத்திகன்



காஷ்மீரத்திலிருந்து பேசுகின்றேன்
காயங்கள் அது
நாளும் பலபெற்ற
நாத்திகன் நான்..!

மதம் மறுக்கும்
நாத்திகன் அல்ல - நான்
தேசம் மறுக்கும் நாத்திகன் !

இந்தியனா? நீ பாகிஸ்தானியா?
எனக் கொக்கரிப்போடு கேள்விதொடுத்து
எள்ளலிடும் குரல்களே - நான் 
இவ்விரண்டுமற்ற காஷ்மீரி நாத்திகன்!

என்னை
எங்களின் இம்மண்ணை
கூறுபோட சண்டையிடும்
அண்டை நாடுகளே
உங்கள் மத்தியில்
தேசத்தால் நான் நாத்திகனே!

என் வீட்டைப் பராமரிக்க
நானிருக்கும்போது
நீங்கள் எதற்கு?

உரிமைகளைவேண்டி
வாழ்விழந்து உயிர் துறக்கும்
எங்களைத் தீவிரவாதிகளென்றும்
தேசவிரோதிகளென்றும்
சிறுமைப்படுத்துவோரே

இதையெல்லாம்
எங்கள் நிலத்தை அபகரித்து
எம் மக்களைக் கொன்றொழித்து
எங்கள் பெண்களை 
ஆயுத முனையில் வன்புணர்ந்தபடியே 
சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்


எங்கோ சிலர் வாழ
நித்தம் நித்தம் மடிகின்றோம் 
பற்பலராய் இங்கு….

மடிவோரில்
ஆணென்றும், பெண்ணென்றும்
கணக்கில்லை

மழலையென்றோ! அபழையென்றோ!
பாகுபாடுகள் அது
இங்கு இல்லவே இல்லை!

பனிமலைகளில் வெண்மை இல்லை
அவையாவும்
வழிந்தோடுகின்றன
செந்நிறக் குருதி ஆறுகளாய்!

என் அண்டை தேசங்களே
ஆங்கிலேயனிடம்
அடிமையாய் கிடந்தது நீங்கள் மட்டுமா
என் பூமியும்தானே இருந்தது !

அவனிலிருந்து
விடுதலைவேண்டி போரிட்டது
நீங்கள் மட்டுமா, நாங்களும்தானே?

இன்று நீங்கள் மட்டும்
சுதந்திர தாகத்தைத் தனித்துக்கொண்டு
எம்மண்ணை
அடிமைப்படுத்துகிறீர்களே
இதென்ன நியாயமோ?

நாங்கள்
ஒவ்வொரு நொடியும்
வாழ்வதற்காவே வீழ்கின்றோம்
எம் தாய் பூமியிலேயே!

ஆங்கிலேயன் அடிமைப்படுத்திய
காலத்தில்கூட எம்மண்ணது
இப்படி இருந்ததில்லை!

வலியோடும், வேதனைகளோடும்
சொல்லுகிறேன்
ஜனநாயகப் போர்வையில்
எங்கள்மீது சர்வாதிகார
வலைவீசும் நாடுகளே!
உங்களிலிருந்துபெறும் விடுதலையே
எங்களுக்குப் பூரணச் சுதந்திரம்

அங்கணமே மாறிடும் 
என் பூமி - அது
புன்னகை தேசமாய் !


தோழமையுடன்
பழனி ஷஹான்