Monday, 3 April 2017

காஷ்மீர் – பற்றி எரியும் பனித்தேசம்




காஷ்மீர் எந்தளவிற்கு அழகுப் பிரதேசமோ, அதைவிட அதிகளவு அது முரண்களின் தேசமாக விளங்குகிறது. பனி மலைகள் படர்ந்த அந்தப் பூமியில், எரிமலைகளால் இயங்கமுடிகின்றது. நீதியையும், அமைதியையும் மட்டுமே விரும்புகிற காஷ்மீரிகளுக்கு; அநீதியையும், யுத்தக் களத்தையுமே தினமும் சுவாசிக்க வேண்டியுள்ளது. ஜனனங்கள் அங்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. மரணங்கள் துக்கத்தை அளிப்பதில்லை. இந்த முரண்கள் ஒரு நூற்றாண்டு காலமாய் வலிகளுடனான வரலாறாய் அங்கு தொடர்ந்து கொண்டுள்ளது.


இந்தியா, காஷ்மீரை தனது மாநிலம் என்கிறது. காஷ்மீர் எங்களுக்கானது என பாகிஸ்தான் எண்ணுகிறது. எங்களுக்கும் இதில் பங்குண்டு என சீனாவும் காஷ்மீருக்குள் கடை விரிக்கிறது. நிஜத்தில் காஷ்மீர் யாருக்கானது? காஷ்மீரின் பிரச்சினை என்பது ஒரு நிலம்சார் பிரச்சினை மட்டும்தானா? என்பதெல்லாம் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டியவைகள். ஆனால் சுருக்கமாக ஒன்றைச் சொல்வதென்றால், காஷ்மீரின் கூட்டு மனசாட்சி இவைகளை மும்முனைத் தாக்குதல்களாகவே கருதுகின்றது.
‘வெள்ளையனே வெளியேறு’ என இந்தியச் சுதந்திர முழக்கங்கள் ஒலித்துக்கொண்டிருந்த வேளையில், காஷ்மீரிலும் சுதந்திர முழக்கங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அது ‘காஷ்மீரைவிட்டு வெளியேறு’ என இந்திய சுதந்திர முழக்கத்திலிருந்து மாறுபட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. இந்தியா முழுக்க பிரிட்டிஷாரை எதிர்த்து நிற்க, காஷ்மீரோ அங்குள்ள மன்னனை எதிர்த்து சுதந்திர தாகத்தை வெளிப்படுத்தியது. இன்றும் காஷ்மீர் அதே சுதந்திர முழக்கத்தை இந்தியாவை நோக்கி எழுப்பிக்கொண்டுள்ளது. பாகிஸ்தானையும், சீனாவையும் காஷ்மீரிகள் இதே கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றனர்.

இந்தியாவை பிரிட்டிஷ் அரசாங்கம் முழுமையாக ஆட்சி செய்ததைப் போல், காஷ்மீரை ஆளவில்லை. காஷ்மீரின் டோக்ரா மன்னன் குலாப்சிங்கே காஷ்மீரை ஆட்சி செய்துவந்தான். பிரிட்டிஷ் அரசு காஷ்மீருக்கு ஒரு பாதுகாவலராக மட்டுமே செயல்பட்டு வந்திருப்பதை அமிர்தசரஸ் உடன்படிக்கை (1846) தெளிவாக்குகிறது. இங்குதான் காஷ்மீர் இந்தியாவிடமிருந்து மாறுபட்டு, தனி நாடாக அது இருந்ததைக் காட்டுகிறது.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு காஷ்மீர் மன்னரான ஹரிசிங், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களை சமாளிக்க இயலாமல் தனது நாட்டை இந்தியாவுடன் இணைக்கும் முடிவை எடுத்தார். காஷ்மீர் அப்படித்தான் இந்தியாவுடன் 1947 அக்டோபரில் இணைந்தது. இந்த இணைவும்கூட தற்காலிகமானதாகவும், இந்தியாவை ஒரு பாதுகாப்பு அரணாக மட்டுமே வைத்தும் நடந்தது. மாறாக இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீர் இணையவே இல்லை என்பதுதான் வரலாறும், சட்டப்படியானதுமாகும்.

இந்திய – காஷ்மீர் இணைப்பிற்கென்றே, இந்திய அரசியல் சட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் 370வது பிரிவாகும். இராணுவம், தகவல் தொடர்பு மற்றும் அயலுறவு ஆகிய மூன்று துறைகளைத் தவிர்த்த வேறெந்த இந்தியத் துறைகளும் காஷ்மீருக்குப் பொருந்தாது என்பதும்; இந்திய உச்சநீதிமன்றம், இந்தியத் தேர்தல் ஆணையம், இந்தியத் தணிக்கைத்துறை போன்றவற்றின் அதிகாரங்கள் காஷ்மீரில் செல்லுபடியாகாது என்பதும்; காஷ்மீரின் முதலமைச்சர் பிரதமரென்றே அழைக்கப்படுவார் என்றும்; இந்தியக் குடியரசுத் தலைவரால் காஷ்மீரின் கவர்னரை நியமிக்க இயலாது என்றும் விரிந்து செல்கிறது 370வது பிரிவின் தனிச்சிறப்புகள். இதுபோக இன்றளவும் காஷ்மீருக்கு தனியேதான் தேசியக்கொடி பறந்துகொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களுடன் “காஷ்மீர் இந்தியாவுடன் நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து, காஷ்மீர் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும்” என்கிற வாக்குறுதியையும் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, காஷ்மீர் மன்னருக்கு அளித்தன் பின்னரே இந்திய-காஷ்மீர் இணைப்பானது உறுதியாகியிருக்கிறது. ஆனால் நேரு அளித்த வாக்குறுதியை இந்தியா காற்றில்விட்டதோடு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தத்தை அளிக்கும் 370வது பிரிவின் சரத்துக்களையும் மெல்ல மெல்ல வலுவிழக்கச் செய்தது. இதுவே காஷ்மீர் மக்களை போராடத் தூண்டியது. இப்படித் தொடங்கிய காஷ்மீரிகளின் போராட்டங்கள்தான், ஒரு இலட்சத்திற்கும் நிகரான மரணங்களைக் கடந்து இன்று புர்ஹான் வானியை எட்டி நிற்கிறது.


காஷ்மீரின் போராட்ட வரலாறை ஆய்வாளர்கள் நான்கு கட்டங்களாகப் பிரித்துள்ளனர். இந்தியச் சுதந்திரத்திலிருந்து 1989ஆம் ஆண்டுவரை அமைதி வழிப் போராட்டத்தையே நடத்திய காஷ்மீரிகள், 1990-களில் ‘ஆசாதி’ (சுதந்திரம்) முழக்கங்கள் பெரும் சப்தமாய் கேட்கும்படி ஆயுதப் போராட்டத்தில் இறங்கினர். இந்த ஆயுத வழிப்போராட்டமான இரண்டாம் கட்டப் போராட்டம் 2003 வரை கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக வெடித்துள்ளது. இதன்பிறகான மூன்றாம் கட்டத்தில், அதாவது 2008ஆம் ஆண்டுவரை அம்மக்கள் மீண்டும் அமைதி வழிக்குத் திரும்பிவிட்டனர். மீண்டும் 2008-இல் நான்காம் கட்டமாகத் தொடங்கியுள்ள ‘ஆசாதி’ யுத்தம் இன்றுவரை நீடித்துக்கொண்டுள்ளது.
இந்தமுறை பெரும் ஆயுதங்களுக்கு மாற்றாக, காஷ்மீரிகள் சாதரணமான கற்களையே இந்திய இராணுவத்திற்கெதிராக வீசிக்கொண்டுள்ளனர். அந்த வகையில் நான்காம் கட்டமானது இயக்க வடிவங்களைத் தாண்டி, வெகுமக்கள் கிளர்ச்சியாக மாறிப்போய்விட்டது. ஐந்து வயதுச் சிறுவன்கூட, இந்தியப் படையினரை நோக்கி கற்களை எறியத் துணிந்துவிட்டான் இன்று.

காஷ்மீரைப் பொறுத்தவரை அங்கு செயல்படும் போராட்டக் குழுக்களின் கோரிக்கைகள் வேறு, வேறு பரிணாமங்களைக் கொண்டவைகளாக உள்ளபோதும், ‘ஆசாதி காஷ்மீர்’ கோரிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுப்பவர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். அதுமட்டுமில்லாமல், முன்பிருந்ததைப் போன்று இப்போதைய போராட்டக்காரர்கள் இல்லை. இவர்கள் முழுக்க முழுக்க காஷ்மீர் மண்ணின் மைந்தர்களாகவே உள்ளனர். நல்ல கல்விப் பின்புலமும், வசதியும் கொண்ட இளைய தலைமுறையினரே இப்போதைய போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டுள்ளனர்.
உலகில் வேறெந்த தேசிய இனப் போராட்டங்களிலும் இல்லாத அளவிற்கு, காஷ்மீர் தேசிய இனப்போராட்டங்கள் பரிணாமத்தை அடைந்திருக்கின்றன. கைகளில் ஆயுதங்களுடன் போராடும் அவர்கள், தங்களை மறைத்துக்கொண்டு இயங்குவதில்லை. மாறாக, அவர்கள் தங்களை முற்றுமுழுதாக சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்திக்கொண்டே செயல்படுகிறார்கள். இப்படியான பகிரங்க போராட்ட வடிவத்தை பரவலாக்கி, அதன்மூலம் காஷ்மீர் போராளிகளுக்கு மனத்திடம் அளித்ததினாலேயே பெரும் கவனத்தைப் பெற்றான் புர்ஹான் வானி.
முழுமையாக 22 வயதைப் பூர்த்தி செய்திடாத அந்த இளைஞரின், இறுதி ஊர்வலத்திற்கு இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டிருந்த காட்சிகளைப் பார்க்கும்போது, ஆசாதி காஷ்மீரிகளின் மத்தியில் புர்ஹான் அடைந்திருக்கும் இடத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. புர்ஹான் குறித்து இணையவெளிகளில் தேடும்போது, விக்கிப்பீடியா புர்ஹானை ‘PROTESTER’ (போராளி) என்றே குறிப்பிட்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. விக்கிப்பீடியா தவிர்த்த பல இணைய இணைப்புகளிலும் அதேவாசகத்தைப் பார்க்க முடிந்தது. இந்த இணையப் பயன்பாட்டு புரட்சியைத்தான் புர்ஹான் செய்திருக்கிறான். பொதுவெளியில் காஷ்மீர் போராளிகளுக்கு ஒரு இடத்தை புர்ஹான் தேடமுனைந்திருக்கிறான்.

எட்டாம் வகுப்பில் 90 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்ற புர்ஹான், பத்தாம் வகுப்பின் இடையிலேயே படிப்பை நிறுத்திவிட்டு போராட்டக் களத்திற்குச் சென்றுள்ளான். தீவிரவாத இயக்கமாகச் சொல்லப்படும் ‘ஹிஸ்புல் முஜாஹிதீன்’ அமைப்பில் இணைந்த புர்ஹான், 20 வயதிலேயே அதன் முக்கியத் தளபதியாக உருவெடுத்துவிடுகிறான். ஒருமுறை புர்ஹான் தனது அண்ணன் காலித்துடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, இந்தியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளான். அதன் எதிரொலியாகவே புர்ஹான் போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்தாக, புர்ஹானின் தந்தை முஸாபர் வானி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் புர்ஹான்கள் எப்படி உருவாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு, புர்ஹானுடைய தந்தையின் பேட்டி ஒரு சாட்சி.

புர்ஹானின் இணையவழிப் பிரச்சாரங்களின் மூலமாக, புர்ஹான் அடையாளம் காணப்பட்டு அவனின் தலைக்கு ரூ.10 இலட்சங்களை இந்திய அரசு அறிவிக்கிறது. இதன் நீட்சியாய் புர்ஹான் ஜீலை 08, 2016 அன்று, தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்திய ரைபிள் படையினரால் சுட்டுக் கொல்லப்படுகிறான். விளைவு, காஷ்மீரில் போராட்டம் மீண்டும் கொதி நிலைக்குச் சென்றுவிட்டது.

சமீபத்தில் காஷ்மீரின் முதல்வர் பொறுப்பிலிருந்த முஃப்தி முஹம்மது சயீது இறந்தபோதுகூட, ஆயிரக் கணக்கில் மட்டுமே மக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்தனர். ஆனால் இந்திய அரசால் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்படும் புர்ஹானின் இறுதி ஊர்வலத்திற்கு மக்கள் இலட்சக் கணக்கில் திரண்டுள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டியவையாகும். இந்த ஒப்பீடென்பது வெறும் நிகழ்வுகளல்ல, காஷ்மீரிகளின் மனநிலையை அறிய இயலும் சந்தர்ப்பங்களாகும்.
ஆனால் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாத இந்திய அரசு, புர்ஹானின் இறப்பிற்கு நீதி வேண்டி திரண்ட மக்கள்திரளை மிகக்கொடூரமாக எதிர்கொண்டது. காஷ்மீர் மக்களின் கண்கள், இந்தியப் படைகள் தொடுக்கும் பெல்லட் குண்டுகளை நேருக்குநேர் சந்தித்தன. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாகத் திகளும் இந்தியாவின் காஷ்மீர் மீதான தாக்குதல்கள் ஒவ்வொன்றும், ஹிட்லரையும் மிஞ்சியவைகளாகவே இருந்தன.

காஷ்மீர் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், இணையத் தொடர்பை முடக்கியும் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. ஆளும் அரசைத் தவிர்த்த ஏனைய அரசியல் கட்சிகள் யாவும், இந்தியாவின் அணுகுமுறையைக் கண்டு முகம் சுழித்துள்ளன. ஒருமாத காலமாக இந்தியா தனது நாட்டின் பகுதியென்று சொல்லிக்கொள்ளும் மக்களின்மீது, பெல்லட் குண்டுகளை மழையாய்ப் பொழிந்துள்ளது.


இந்தியப் படைகளின் தொடர் தாக்குதலால் பார்வை இழந்தவர்கள் 200க்கும் அதிமானவர்களாக உள்ளனர். இந்தவகை பெல்லட் குண்டுகளை மற்ற நாடுகள் முழங்காலுக்கு கீழே சுடும் வழக்கத்தையே கொண்டுள்ளன. அப்படியிருக்க இந்தியா அந்த அறங்களை முற்றாக மறுத்து, உலகின் மிகப்பெரும் சர்வாதிகார நாடாக இன்று உருவெடுத்திருக்கிறது. இந்தியப் படைகளால் குருடாக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு, இந்தவகை தோட்டா ரவைகளை எப்படி உடலிலிருந்து எடுப்பதென்றே தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும் காஷ்மீரிகளின் மீதான தாக்குதலை, போர்ச் சூழலலுடன் ஒப்பிட்டுள்ளனர் மருத்துவக் குழுவினர்.  

காஷ்மீரிகளை தனது சொந்த மக்கள் என இந்தியா சொல்லிக்கொள்வது உண்மை என்றால், இப்படித்தான் குண்டு மழையில் காஷ்மீரை அணுகுமா இந்தியா? இந்தியாவின் வேறெந்த மாநிலத்தை இந்தியா இப்படி அணுகியிருக்கிறது? இப்போது நடந்து முடிந்திருக்கும் காஷ்மீர் மீதான இந்தியத் தாக்குதலில் உயிரிழந்துள்ளவர்கள் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோராக உள்ளனர். இந்தியாவின் இம்மாதிரியான கொடும்போக்குகளால்தான், ஆசாத் காஷ்மீர் என்கிற முழக்கம் இன்று வெகுமக்கள் கோரிக்கையாக மாறியுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
பாதுகாப்பிற்காக நிற்கும் இராணுவ வீரர்களே காஷ்மீரப் பெண்களை கூட்டு வன்புணர்வு செய்வது வாடிக்கையாகப் போய்விட்ட நிலையில், உள்ளூர்வாசிகளையே அந்நிய ஊடுருவல்காரன் எனச்சொல்லி சுட்டுக் கொலை செய்து அதன்மூலம் பதவி உயர்வை அடைய முனையும் காவலர்கள் இருக்கும்பட்சத்தில், சராசரி வாழ்வை மேற்கொள்ளும் நபர்களின் சுயமரியாதைகளை அன்றாடம் இராணுவம் கலங்கப்படுத்தும்போதும், தங்களுக்கு அடிபணிய மறுக்கிறவர்களை சர்வதேச தீவிரவாதிகளாக இராணுவம் சித்தரிக்கும்போதும், காஷ்மீரிகள் எதை நாடுவார்கள்?

துப்பாக்கிகளின் முனையில் இந்தியா காஷ்மீரிகளை பலவந்தப்படுத்தும் போதெல்லாம், காஷ்மீரிகள் போராட்டக் குழுக்களை நோக்கியே பெரிதும் நகர்த்தப்படுகிறார்கள். அப்போது அவர்கள் ‘ஆசாதி’ என முழங்காமல், வேறென்ன வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்?
காஷ்மீர் மக்களைப் போராடுவதற்கு பாகிஸ்தான் தூண்டும் காலம் முடிந்துவிட்டது. இப்போது ஆசாதியின் முழக்கம், இந்தியப் பேரரசின் சர்வாதிகாரத்தால் உயிர்பெற்றிருக்கிறது. ஆசாதி, ஆசாதி எனக் கேட்கும் பெருங்குரல்கள் காஷ்மீரின் சாமானிய மக்களின் வாயிலிருந்து இன்று உதிரத் தொடங்கியிருக்கிறது. அவர்கள் கற்களை கையிலெடுத்துக்கொண்டு, தலைவர்கள் யாருமற்று தன்னெழுச்சியாக வீதிகளை நிறைத்துக் கொண்டுள்ளனர். சொல்லப்போனால், தலைவர்கள் யாவரும் மக்களின் இழுப்பிற்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் காஷ்மீரின் இன்றைய எதார்த்தம்.

இந்த எதார்த்தச் சூழலை உள்வாங்கிக்கொண்டுதான் காஷ்மீரை இந்தியா அணுக வேண்டும். மாறாக மீண்டும், மீண்டும் பழியைப்போட பாகிஸ்தானைத் தேடாமல், இந்தியா தனது தவறை மீளாய்வு செய்ய வேண்டும். காஷ்மீர் மக்கள் ஆசாதியை விரும்புவதைப் போலவே, அமைதியையும் விரும்புகின்றனர். இப்போதைக்கு இந்தியா காஷ்மீரிகளுக்கு ஒரு பெரும் நம்பிக்கையை தனது செயல்பாடுகளின் வழியாக அளித்தாக வேண்டும். அந்த நம்பிக்கை தரும் செயல்பாடுகள்தான் காஷ்மீரிகளை கற்களை கீழே போட வைக்குமே தவிர, இந்தியப் படைகளின் துப்பாக்கிகள் அல்ல.

காஷ்மீர் பெண்களின்மீது அத்துமீறிய இராணுவத்தினரை இந்தியா நீதியின் அடிப்படையில் தண்டிக்க வேண்டும். 370வது பிரிவின் சரத்துகள் முழுவதுமாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். ஏழு காஷ்மீர் சிவிலியர்களுக்கு ஒரு ஆயுதமேந்திய இராணுவச் சிப்பாய் என்கிற போக்கை இந்தியா மாற்றி அமைத்து, காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ஏழு இலட்சத்திற்கும் மேலான இராணுவத்தினரை அங்கிருந்து திரும்பப் பெறுதல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நேரு கொடுத்த வாக்குறுதியை இந்தியா தயக்கமற்று நிறைவேற்ற முன்வர வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளின் மூலம்தான் காஷ்மீரிகளுக்கு இந்தியா நம்பிக்கையை ஏற்படுத்த இயலும். இந்த நம்பிக்கைதான் காஷ்மீர் சிக்கலுக்கு இப்போதைக்குள்ள ஒரே தீர்வுமாகும்.

மாறாக ஆயுத முனையிலேயே காஷ்மீரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று இந்தியா நினைத்துக் கொண்டிருப்பது என்றுமே சாத்தியமில்லாத ஒன்று. அதேபோல் இந்தியப் படைகளுடன் போரிட்டு ‘ஆசாதியை’ காஷ்மீர் பெற்றுவிட முடியுமென்பதும் அவநம்பிக்கை மட்டுமே. இந்த இரண்டுவிதமான அணுகுமுறைகளினாலும் இழப்புகள் தொடருமே தவிர தீர்வு ஒருபோதும் எட்டிவிடாது.

இதேபோல் இங்கு இன்னொன்றையும் கவனத்தில் நிறுத்த வேண்டியுள்ளது. காஷ்மீர் சிக்கலென்பது வெறுமனே இந்தியா, பாகிஸ்தான் மட்டுமே பேசித் தீர்த்துவிடக்கூடிய ஒன்றல்ல. மாறாக இதில் காஷ்மீருக்கும் பங்குண்டு. எப்படி தமிழக மீனவப் பிரச்சினையில் இந்திய அரசும், இலங்கை அரசும் மட்டுமே பேசிவிட்டு இருநாடுகளும் மீனவர் தரப்புகளை மறுத்துக் கொண்டுள்ளதோ, அதேபோலத்தான் காஷ்மீர் சிக்கலிலும் நடைபெற்றுக்கொண்டுள்ளது.

இங்கு பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் மட்டுமல்ல, காஷ்மீரும்தான் என்பதை இருநாடுகளும் வசதியாக மறந்துவிடுகின்றன அல்லது காஷ்மீர் தரப்பை பலவந்தமாக மறுத்துவிடுகின்றன. எதிர்காலத்தில் இந்த முத்தரப்பில் நான்காவது முகமாய் சீனாவும் உருவெடுக்கலாம். அதற்கான எல்லாவித வாய்ப்புகளுமே உண்டு. அப்படியான நெருக்கடிகள் சூளும்பட்சத்தில், ஒருவேளை அதன்வழியாகக்கூட காஷ்மீருக்கு ஒரு இறுக்கத் தளர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

மற்றபடி ’காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே’ என்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை என்றாலும், அதனை தீர்மானிக்க வேண்டியது காஷ்மீரிகள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமெனில், அது இந்தியாவுடன் இசைய வேண்டும். இந்தியா காஷ்மீரில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். ஆனால் காஷ்மீர் ஆசாதியைப் பெற வேண்டுமானால், அது ஐ.நா அவையில்தான் சாத்தியப்படும். அதைவிடுத்து இந்திய அரசிடம் காஷ்மீர், ஆசாதியைப் பெற்றுவிட முடியும் என்பதெல்லாம் வெற்று நம்பிக்கை மட்டும்தான். அதேசமயம் காஷ்மீரிகள் ‘ஆசாதியைக்’ கேட்பது ஒன்றும் தேசவிரோதக் கோரிக்கையல்ல. அது நேரு அவர்களுக்கு அளித்த வாக்குறுதி என்பதை இந்தியா நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

-பழனி ஷஹான்

சொல்வதெல்லாம் உண்மை


ரு நிமிடத்திற்கும் மறுநிமிடத்திற்குமான இடைவெளியைக் குறித்து நம்மிடம் பெரிய மதிப்பீடுகள் இருப்பதே இல்லை. இயல்பில் நிமிடங்கள் என்பது அப்படித்தான் உள்ளது. ஒரு வாக்கியத்தை முழுவதுமாக உதிர்த்துவிடுவதற்குள் ஒரு நிமிடம் இறந்துவிடுகின்றதுபோது, நம்மிடம் நிமிடம் குறித்து மிகை மதிப்பீடுகள் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் நிமிடங்கள் எப்போதுமே அப்படி இருந்துவிடுவதில்லை.
இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டு உயிர் பலிகள் நேரவும், ஒரு கட்டிடம் சரிந்து விழவும், நிலநடுக்கம் உருவெடுக்கவும், தொண்டைக் குழியை எட்டி நிற்கும் ஒருவரின் உயிர் பிரிந்து செல்லவும், ஆழிப் பேரலை தோன்றவும், ஒருவரின்மீதான நம்பிக்கை எதிர் துருவத்திற்குச் செல்லவும், ‘புரூட்டஸ் நீயுமா! (You too Brutus)’ என ஜீலியஸ் சீஸர் கேட்பதற்கு முன்பான சம்பவம் நிகழ்வதற்கும் ஒரு நிமிடம் போதுமானதாக இருக்கிறது. இமை மூடித் திறக்கும் தூரத்தில், ஒரு திகில் நம்மைச் சூழ்ந்துவிடுகின்றது.

‘வெண்ணிற ஆடை’ காட்டும் மனிதர்களின் வாழ்வு இப்படிப்பட்டதுதான். எளிய மனிதர்கள் முதல் உயர் வர்க்கம் வரை, நிமிடத் தாக்குதலில் வீழ்த்தப்பட்டுவிடுகின்றனர். இது நமக்கு நேராது என்பதற்கு எந்த உறுதிப் பத்திரத்தையும் யாரும் அளித்துவிட முடியாது என்பதைத்தான், வெண்ணிற ஆடையின் மனிதர்கள் சாட்சி பகர்கிறார்கள். நாம் வாழும் காலத்தின், அங்கீகரிக்கப்படாதப் பக்கங்களுக்கு நியாயம் கோரும் ஒன்றை எடுத்துப் பேசும் முயற்சியை வெண்ணிற ஆடை செய்ய முனைந்திருக்கிறது.


புனைவிற்கும் எதார்த்தத்திற்கும் இடையேயான புள்ளியை விலக்கி வைத்து, இரண்டின் கலவையிலிருந்து இப்புத்தகத்திற்கு சாயம் பூசப்பட்டுள்ளது. “Literature is a Reflection of Life” (வாழ்க்கையின் பிரதிபலிப்பே இலக்கியம்) என்று ஆங்கிலத்தில் வரையறை செய்திருப்பார்கள். வெண்ணிற ஆடை இந்த வரையறையின் பிரதிபலிப்பாகவே மிளிர்கிறது. இது நமது காலத்தின்மீது ஆய்வுக் கண்ணாடியை வீசி, நம்முடைய உலகத்தை நமக்கு விசித்திரமாய் காட்டியிருக்கிறது.

White Collar Criminals” என்று ஒரு சொல்லை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது ‘குற்றம் வெள்ளை நிறம்’ என்று அதனை பொருள்படுத்துவார்கள். இப்புத்தகத்திற்கு ‘வெண்ணிற ஆடை’ என்கிற தலைப்பும் அப்படியான அர்த்தத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இந்த வெண்ணிறத்துக்குள் பொதிந்து கிடப்பது யாவும் குற்றங்களே. குற்றங்களைச் சொல்லிக் குமுறும் மனிதர்களே இதில் வாழ்கிறார்கள். ஆனால் கறை படிந்த அவர்களின் உடலை, வெண்ணிற ஆடைகளினால் மறைத்துக்கொண்டு வலம் வருகிறார்கள் அவர்கள்.

சின்னஞ்சிறு கதைகளின் வழியாக ஒரு உலகத்தையே விரித்துச் செல்வதில் சரவணன் சந்திரன் கை தேர்ந்தவர். ஒரு பத்திக்கும் இன்னொரு பத்திக்குமான இடைவெளியில், ஒரு மலை முகட்டை மண் தரையாக்கும் வித்தையை அவரின் எழுத்தில் காண முடிகின்றது. ‘வெண்ணிற ஆடை’ என்கிற அவரின் இப்புத்தகத்தைப் புரட்ட, புரட்ட புருவங்கள் தன்னியல்பாக மேல்நோக்கிச் சென்றுவிடுகின்றன. பெரும் வினாவொன்று விநாடியில் இல்லாமல் ஆகிவிடுவதென்பது, மனதின் சீர்நிலையை களைத்தெறிந்துவிடுகின்றது.

இருபது குறுங்கதைகளைத் தாங்கிய தொகுப்பான ‘வெண்ணிற ஆடையை’ நம் விருப்பத்திற்கேற்ப அணிந்துகொள்ள முடிகின்றது. இது ஒரு ஆவணங்களின் கட்டுரைத் தொகுப்பு. நடப்பின்மீது புனைவைத் தெளித்துள்ள சிறுகதைகளென்றும் இதைச் சொல்ல முடியும். இருபதையும் இணைத்து நாவல் என ஒற்றைப் படிமத்திற்குள் அடைத்து வைக்கவும் வெண்ணிற ஆடையில் வழி இருக்கிறது. சட்டென ஒரு பெட்டகத்திற்குள் வைத்து பூட்டிவிட இயலாத ஆடையை மிக நேர்த்தியாக சரவணன் வடிவமைத்திருப்பது ஒரு அழகான முரணாகும்.

“ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியை தமிழகத்தில் அறியாதவர்கள் இருக்க முடியாது. ‘என்னம்மா நீங்க இப்புடி பண்றீங்களேம்மா’ என்கிற புகழ்பெற்ற வசனத்தின் பிறப்பிடமான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் இயக்குனராகப் பணியாற்றிய சரவணன் சந்திரன், அந்நிகழ்ச்சியின் வழியாக அவருக்குக் கிடைத்த அனுபவங்களை இப்புத்தகத்தில் எழுத்தாக்கியிருக்கிறார்.


மனித வாழ்வின் தகிக்கும் பக்கங்களையும், நாம் வெளியே சொல்லத் தயங்கும் வாழ்வின் கோணல்களையும், நாகரிகத்தின் பெயரால் இந்தச் சமூகம் மறுத்துக் கொண்டிருக்கும் உண்மைகளையும் வெண்ணிற ஆடை பேசியிருக்கின்றது. இன்னொரு வகையில் சொன்னால், வெண்ணிற ஆடை என்பது ‘சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின்’ அறியப்படாத அத்தியாயங்களாகும். கேமிராவின் பார்வையிலிருந்து தவறிச்சென்ற நிகழ்வுகளையும், ஸ்டுடியோவிற்குள் அரங்கேற்றப்படாமல் விடுபட்ட காட்சிகளையும் வெண்ணிற ஆடை பதிவாக்கியுள்ளது.

நாம் மிகச்சாதாரணமாக வாசித்துவிட்டுக் கடந்து சென்றுவிடும் தினசரி ஏடுகளின் செய்திகள்தான் வெண்ணிற ஆடை. கள்ளக் காதல், அதன்பொருட்டு நிகழும் கொலை, செளகரியங்களுக்காக நடத்தப்படும் கொள்ளைகள், சொத்துப் பிரச்சினை, நீதிமன்ற வளாகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் குடும்பப் பகை, பண மோகத்தால் நிகழும் குற்றங்கள் என்று நீண்டு செல்லும் அன்றாடங்களின் பிம்பங்களுக்குப் பின்னாலிருக்கும் மர்ம முடிச்சுக்களை, வெண்ணிற ஆடை பகிரங்கப்படுத்துகிறது.

வெளிப்படையில் ஒரு சிறிய நிகழ்வாகத் தெரியும் இதுபோன்றவற்றின் பூதாகர உருவங்களை வெளிக்கொணரும்போது, அதில் இருக்கும் புதிர் தன்மைகள் நம்மை உறைய வைத்துவிடுகின்றன. வெண்ணிற ஆடையின் எல்லாக் கதைகளும் இவ்வாறனவைகள்தான். அது நம்மைத் தொந்தரவு செய்கின்றன. உறக்கத்தைத் தடுக்கின்றன. தியேட்டரைவிட்டு வெளியேறியப்பின்பும் நம்மைப் பின்தொடரும் படத்தின் இறுதிக் காட்சிகளைப் போல, வெண்ணிற ஆடையை மூடிவைத்தப் பின்னரும் அதன் கதாபாத்திரங்கள் நம்மைவிட்டு அகல அவகாசங்களை எடுத்துக்கொள்கின்றன.
தனது வாழ்விற்காக தன்னுடைய பைத்தியகாரச் சகோதரியையும், தாயையும் நடுரோட்டில் அநாதையாக விட்டுச்செல்லும் ஒருவளை; திருமணமாகி ஆண்டுகள் பல கடந்த நிலையில் தனது முன்னாள் காதலனுடன் தஞ்சமடையும் ஒருவளை; முகச்சிதைவு செய்யப்பட்ட பெண்ணொருத்தி பழிவாங்கத் துடிப்பதை; தனது மனைவியால் கொடுமைக்குள்ளாகி பிரமைபிடித்தவனை; கட்டுப்பாடற்ற வாழ்வின் போதையால் திசைமாறிப்போய் தனது தாயைக் கொலை செய்ய தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனை; தனது கணவரைக் கொலை செய்த டீச்சரை; தன்னுடைய ஓரின உறவால் கணவனை நிராகரிக்கும் மனைவியை; மனைவி மற்றும் மாமியாரால் மனம் நொடிந்த ஒருவனை என சோகங்களும், அவலங்களும், குரூரங்களும் நிறைந்த நிஜங்களை வெண்ணிற ஆடையின் ஒவ்வொரு தாள்களும் மையில் பொறித்திருக்கிறது.

வெண்ணிற ஆடை கூறும் சம்பவங்கள் எதுவும் ‘வெளிநாட்டு விநோதங்கள்’ அல்ல. அவை நம் தமிழ்ப் பூமியில்தான் நடந்தும், நடந்துகொண்டும் இருக்கின்றன என்பது நமக்குச் சற்று வியப்பைத் தரலாம். வாசிப்பின்போது அதில்வரும் கதை மாந்தர்களின் தோற்றத்தைக் குறித்து நாம் கற்பனை செய்ய முனையலாம். அந்த மனிதர்கள் நமக்கு மத்தியில்தான் வாழ்கிறார்கள் என்பதை அறிகிறபோது, நாம் சற்று திடுக்கிட்டுக்கூடப் போகலாம்.

இதில்வரும் கதைகளில் சில சொல்லக்கூசும் கதைகளாக இருக்கலாம். நாம் பார்க்க மறுக்கும் அசிங்கங்களைக்கூட அதன் சில கதைகள் நமக்கு காட்டலாம். இதை வாசித்துவிட்டு, இதுவெல்லாம் எழுத வேண்டியவைகளாக என தூய்மைவாதிகள் கேள்வி எழுப்பலாம். ஆனால் இந்தச் சமூகம் ஏற்க மறுக்கும் வாழ்வைச் சொல்வதன் வழியாக, சரவணன் நீதியைப் பேசவே பிரயத்தனப்பட்டிருக்கிறார். தூய்மைவாதத்தை முன்னிறுத்தி மறுக்கப்படும் மனித முகங்களை ஏந்துவதினால், இப்புத்தகம் நமக்கு கசப்பைத் தரலாம். அதனால் ‘உண்மைகள் எப்போதுமே கசக்கும்’ என்கிற சொல்வடையை நான் இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.


இது உண்மைகளாக இருக்கும்பட்சத்தில்கூட, நம்மால் இதை இயல்பாக வெளியில் பேச இயலுவதில்லை. இதில்வரும் நபர்கள் நம்முடைய தெருவிலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு குகைவாசியைப் போல, ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். நம்மால் இனம் காணமுடியாத அவர்களை, சரவணன் இழுத்து வந்து அடையாளப்படுத்தியிருக்கிறார்.
வெண்ணிற ஆடை எனும் இப்புத்தகம் கூறும், நவநாகரீக வாழ்வின் அடியில் புதையுண்டிருக்கும் நாற்றங்களை நம்மால் சுவாசிக்க முடியவில்லை. அது நம்மைத் திணறடிக்கிறது. திகைப்புறச் செய்கிறது. நம் நம்பிக்கைகளை அது பொய்யாக்குகிறது. மரத்திலிருந்து முறிந்துவிழும் கிளைகளைப் போல, அதன் ஒவ்வொரு கதைகளும் திடீரென்று திசை மாறி கலக்கமடையச் செய்துவிடுகின்றன. அதேசமயம் அதன் பக்கங்கள் ஒரு தொடர்வண்டியைப் போல அணிவகுத்துச் சென்று, நம்மை அயற்சியடையச் செய்யாமல் பயணிக்க வைக்கின்றன.
வெண்ணிற ஆடையில் ‘சொல்வதெல்லாம் உண்மை’.

-     பழனி ஷஹான்

நன்றி : புத்தகம் பேசுது இதழ், ஜனவரி 2017 

தமிழகம் கேட்பது நதியல்ல; நீதி


ந்தியாவின் பரம எதிரியாக உருவம் பெற்றுள்ள நாடு பாகிஸ்தான். இந்த இருநாடுகளுக்கும் இடையில் ‘சிந்து, ஜீலம், ராவி, செனாப்’ உள்ளிட்ட ஆறுகள் எந்தப் பிரச்சினைகளுமின்றி பாய்ந்து கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவின் அங்கமான தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே ஓடும் காவிரி ஆறு, குருதிப் பலிகளைப் ஏற்படுத்திய ஒன்றாக இருக்கிறது.

இந்தியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாயும் ஆறுகள் நிறைய உள்ளன. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, மகாநதி, கிருஷ்ணா நதி போன்ற இந்தியாவின் பெரும் ஆறுகள் பலவும், பல்வேறு மாநிலங்களில் சச்சரவுகளற்றுப் பயணிக்கின்றன. ஆனால் காவிரிக்கு மட்டும் அது சாத்தியமாவதே கிடையாது. காவிரி நதியின் இந்த முரண் ஒரு நூற்றாண்டு காலப் பின்னணி கொண்டது.

கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தின் தலைக்காவிரிப் பகுதியில்தான் பொன்னி நதியெனும் காவிரி பிறப்பெடுக்கிறது. அதனால் காவிரி மீது கர்நாடகம் பெரும்பான்மை உரிமையைக் கேட்கிறது. மேலும் தங்களுக்கே நீர் இல்லாதபோது, நாங்கள் எப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பது என்கிற நியாயப் பூர்வமான வாதத்தையும் கர்நாடகம் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டுள்ளது. தமிழகம், காவிரி நீரை முறையாகத் தேக்கி வைக்காமல் வீணாகக் கடலில் கலக்க வைத்துவிடுகிறது என்கிற குற்றச்சாட்டையும் கர்நாடகா தவறாமல் சுட்டிக் காட்டுகிறது.


ஒவ்வொரு முறையும் காவிரி டெல்லிப் பயணமாகி உச்ச நீதிமன்றத்தை அடையும்போதெல்லாம், கர்நாடகா இவைகளைத்தான் தன் பக்க நியாயங்களாக எடுத்துரைக்கின்றது. இதனோடு 1924ஆம் ஆண்டைய ஒப்பந்தம் இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்டது என்பதாலும், அது 1974ஆம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டது என்கிற காரணத்தாலும், காவிரி மீது தமிழகம் கோரும் உரிமைகள் முறையானதல்ல என்பதையும் சேர்த்தே சொல்லி வருகின்றன, கர்நாடக அரசுகள். ஆனால் தமிழகம் காவிரிக்காக கர்நாடகத்திடம் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் சண்டையென்பது உண்மையில் சண்டையல்ல, அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனக்கு வழங்கியிருக்கும் உரிமையின் வாதம்.

1892ஆம் ஆண்டு முதன் முதலில் காவிரி நதி தனது பிரச்சினையின் முகப்பைச் சந்தித்தது. திப்பு சுல்தானின் ஆட்சி வரை காவிரியின் வரலாற்றில் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே எவ்வித முரண்களும் உண்டாகவில்லை. ஆனால் அதற்கடுத்த அரசுகளின் குறுகிய மனோபாவத்தால் காவிரி நதி மெல்ல, மெல்ல பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்கி, 1892ஆம் ஆண்டு இரு அரசுகளும் ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிலையை அடைந்தது.

அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு புதிய அணைகளைக் கட்டுதல், பாசனப் பகுதிகளை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை, சென்னை மாகாணத்தின் அனுமதியில்லாமல் செய்யக்கூடாது என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் மைசூர் அரசோ அதனை மிகக் குறுகிய காலத்திலேயே அவமதிப்புச் செய்து, ‘கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவோம்’ என காவிரிப் பிரச்சினையின் வேரை உருவாக்கியது.
பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் அப்போது இந்தியா இருந்ததினால், மைசூர் மற்றும் சென்னை ராஜ்ஜியங்களுக்கு இடையேயான இந்த அணைப் பிரச்சினையானது இங்கிலாந்து வரை சென்றுவிட்டது. இதனைப் பிரிட்டிஷ் அரசு கையிலெடுத்ததின் விளைவாகத்தான், ’1924ஆம் ஆண்டு ஒப்பந்தம்’ உருவானது. காவிரி விவகாரத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக இன்றளவும் இந்த ஒப்பந்தம் பேசப்பட்டுக் கொண்டுள்ளது. கர்நாடகம் இதனைக் காலாவதி ஒப்பந்தம் எனவும், தமிழகம் அதை மறுத்து அது காலாவதி ஆகவில்லை என்றும் கூறிக்கொண்டுள்ளன.

“மைசூர் அரசு கிருஷ்ணராஜ சாகர் அணையையும், மெட்ராஸ் அரசு மேட்டூர் அணையையும் கட்டிக் கொள்ளலாம்” என்கிற தீர்ப்பை இங்கிலாந்து அளித்தைத் தொடர்ந்து, 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் உருவானது. அதன்படி இரு அரசுகளும் ஆளுக்கொரு அணைகளைக் கட்டிக் கொள்வதென்றும், வரும் காலங்களில் மைசூர் அரசு புதிய அணைகளைக் கட்டவோ, பாசனப் பகுதிகளை விரிவுபடுத்தவோ சென்னையின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும், மேலும் இந்த ஒப்பந்தம் 50ஆண்டுகள் கழித்து புதுப்பித்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருந்தபோது, கர்நாடக மாநிலமாக மாறிய மைசூர் அரசு 1970-களில் மீண்டும் பிரச்சினையைக் கிளப்பியது. ஒப்பந்தத்தை மீறிப் பேசத் தொடங்கியது.

1969-ஆம் ஆண்டு காவிரியின் துணை ஆறுகளான கபினி, ஹேமாவதி ஆகியவற்றிற்கு புதிதாக அணைகள் கட்டுவோம் என அறிவிப்புச் செய்துவிட்டு, தமிழகத்தின் அனுமதிக்காக காத்திராமல் அணையைக் கட்டும் வேலையைத் துவக்கியது கர்நாடகம். இந்த அநீதியான செயலால் ஆத்திரமடைந்த தமிழகம், கர்நாடகத்துடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையின் கால கட்டங்களில்தான், ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைக்க வேண்டும் என்று 1971ஆம் ஆண்டு மத்திய அரசிற்கு புதிய கோரிக்கையை வைத்தார் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி.
ஆனால் பிரதமர் இந்திராகாந்தி நடுவர் மன்றத்தை அமைக்காமல், மீண்டும் இரு மாநிலங்களையும் பேசிப் பார்க்குமாறு பணிந்தார். பிரதமரின் ஆலோசனைப்படி மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. மூன்றாண்டுகள் தொடர் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துகொண்டிருந்த சூழலில், கர்நாடகம் புதிதாக ஒரு வாதத்தை எடுத்து வைத்தது. 1924-ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் 1974இல் காலாவதியாகிவிட்டது, எனவே நாங்கள் புதிதாக அணைகளைக் கட்ட தமிழகம் தலையீடு செய்ய முடியாது என்று பிரச்சினையை பூதாகரப்படுத்தியது கர்நாடக அரசு. கூடவே தமிழகத்திற்கு இனி தண்ணீரும் தர முடியாது என்று சட்டம் பேசியது. எனவே காவிரி உச்சநீதிமன்றம் நோக்கி பாய்ந்தது.

உச்சநீதிமன்றமோ ‘ஐம்பதாண்டுகள் கழித்து புதுப்பித்துக் கொள்ளத்தான் ஒப்பந்தத்தில் கூறப்படுள்ளதே தவிர, ஐம்பதாண்டுகளோடு ஒப்பந்தம் காலாவதியாகிவிடும் என்று எழுதப்படவே இல்லை’ என்று கர்நாடகத்தின் வாதத்தை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் பிரிட்டிஷ் அரசின்போது போடப்பட்ட ஒப்பந்தம் என்பதால் இது செல்லாது என்கிற கர்நாடகத்தின் கூற்றையும், உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் நிராகரித்துவிட்டது.
அதன்படி கர்நாடகம் புது அணைகளைக் கட்ட இயலாது எனவும், தமிழகத்திற்கு முறையாகத் தண்ணீர் தர வேண்டுமென்றும் சட்டக் கட்டளை உருவாகியது. ஆனால் கர்நாடகமோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், தனது பழைய வாதங்களையே அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து வந்தது. இப்படித்தான் கர்நாடகம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை புறக்கணித்து தனது எதேச்சதிகாரப் போக்கோடு செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் காவிரி நடுவர் மன்றம் கேட்ட தி.மு.க ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகி, தமிழகத்தில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க அரசு தொடங்கியது.

அ.தி.மு.க.வின் ஆட்சியில் காவிரி விவகாரம் ‘மெளனித்துக் கிடந்த’ சூழலில், 1983ஆம் ஆண்டு தமிழக விவசாயிகள் சங்கம் ஒன்று, உச்சநீதிமன்றத்தில் ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைக்க வேண்டி மனு செய்தது. அந்த மனு மீதான பரிசீலனைகள் தொடர்ந்து கொண்டிருந்த சூழலில், 1989இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க விவசாயிகளின் பரிசீலனை மனுவிற்கு ஆதரவளித்து, நடுவர் மன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தது. அதேபோல் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, அதில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் இந்த ஒருமித்த முடிவு அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்று சேர்ந்தது.

பிரதமர் வி.பி.சிங் அனைத்துக் கட்சி கூட்டத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டாலும், தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன்படி தமிழக சட்டமன்றத்தில் 24-04-1990 அன்று ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைத்திட வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் நீட்சியில், 02-06-1990இல் “காவிரி நடுவர் மன்றம்” மத்திய அரசால் அமைக்கப்பட்ட வரலாறு நிகழ்ந்தது.

காவிரி நடுவர் மன்றம் அமைந்தவுடன் 1991-ஆம் ஆண்டு, நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கி, அதன்மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை முறையாக கர்நாடகம் வழங்கிட வழிசெய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கையை வைத்தது. ஆனால் இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் உரிமை நடுவர் மன்றத்திற்கு கிடையாது என்று நடுவர் மன்றம் மறுத்துவிட்டது. இதனால் தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது. இடைக்காலத் தீர்ப்பை அளிக்கும் அதிகாரமும், உரிமையும் நடுவர் மன்றத்திற்கு உண்டு என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி, உருவெடுத்தது நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு.

கர்நாடகா ஆண்டிற்கு 205 டி.எம்.சி காவிரி நீரை தமிழ் நாட்டிற்கு அளிக்க வேண்டுமென தனது இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. காவிரி நடுவர் மன்றம். 1991 ஜீன் மாதத்தில் வெளியான இத்தீர்ப்பில் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீர் வழங்கபட வேண்டும் என்பதுகூட நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல், கர்நாடகாவிடம் உள்ள 11.2 இலட்ச நீர்ப்பாசன நிலங்களை அதற்குமேல் அதிகரிக்கக்கூடாது என்றும் இடைக்காலத் தீர்ப்பில் வரையறை செய்யப்பட்டது. இவைகளை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகும்வரை கர்நாடகம் பின்பற்ற வேண்டுமென நடுவர் மன்றம் அழுத்தமாகக்கூறி எச்சரித்தது. ஆனால் கர்நாடக அரசு, நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு விரைந்தது.

நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படியான 205 டி.எம்.சி தண்ணீர் என்பது, தமிழகத்தின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யக்கூடியது அல்ல. இன்னொருபுறம் 252 டி.எம்.சி தண்ணீர் முன்னரே நீர்வளத் துறையால் தமிழகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு, அது சில காலம் கர்நாடகத்திலிருந்து பெறப்பட்டதை ‘நடுவர் மன்றம்’ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல், சர்வதேச நதி நீர் பங்கீட்டை வரையறுக்கும் 1966ஆம் ஆண்டின் ஹெல்சிங்கி விதியையும் பெருமளவு நடுவர் மன்றம் பின்பற்றவில்லை. இதுபோன்ற குறைபாடுகள் இதில் உள்ளபோதும், தமிழகம் அத்தீர்ப்பிற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொண்டது. ஆனால் பெருமளவு கர்நாடகாவிற்கே சாதகமான அத்தீர்ப்பைக்கூட கர்நாடக அரசு ஜீரணித்துக்கொள்ளாமல், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

கர்நாடகாவின் வழக்கை எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், டிசம்பர் 11,1991 அன்று தனது தீர்ப்பை அளித்தது. காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பு செல்லுமென்றும், இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டுமென்றும் மீண்டும் கர்நாடகாவிற்கு சாட்டையடி கொடுத்தது உச்சநீதிமன்றம். ஆனால் கர்நாடகா வழக்கம் போல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உதாசீனப்படுத்தியது. கர்நாடகத்தின் அன்றைய முதலமைச்சரான பங்காரப்பா ‘தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது’ எனக்கூறி வெளிப்படையாகவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்தார். அத்தோடு நில்லாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கெதிராக முழு பந்த் ஒன்றையும் பங்காரப்பாவே அறிவிப்பு செய்து, அதன்மூலம் நிகழ்ந்த கோரங்களுக்கு அவரே தலைமையும் தாங்கினார். இதன் தொடர்ச்சியாய் உருவான பெங்களூர் கலவரம் தமிழர்களின் வாழ்வை இரணத்தில் மூழ்க வைத்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான அடுத்த தினத்தில், அதாவது 12-12-1991 அன்று கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் தாக்குதலுக்கு ஆளாகினார்கள். தமிழர்களின் சொத்துக்கள் பலகோடி அளவில் சேதமாக்கப்பட்டது. தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக 18-பேர் அப்போது கன்னடத்தவர்களின் வெறி ஆட்டத்திற்கு பலியானதாக அரசின் தகவல் கூறுகிறது. மேலும் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து, தமிழ் நாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்ட இடப்பெயர்வுத் துயரமும் அப்போது நடந்தது. கர்நாடக அரசின் துணையோடு நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கரவாதம், டிசம்பர் 13ஆம் தேதியும் தொடர்ந்துள்ளது. இந்த இரண்டு நாட்களில் கர்நாடகத்தில் வசிக்கும் அடித்தட்டு தமிழர்கள் வாங்கிய அடிகளும், பெற்ற வலிகளும் எளிதில் மறந்துவிட இயலாதது ஆகும்.

கன்னடத்தவர்களின் தாக்குதல்களைக் கண்டு அப்போது தமிழகம் கொதித்தெழுந்தது என்றாலும், தமிழகத்தில் வாழும் கர்நாடகத்தினர்மீது தமிழர்கள் தாக்குதல்கள் எதுவும் நடத்தவில்லை. மாறாக தமிழகம் அப்போதுகூட சட்ட வழியிலேயேதான் நீதியைத் தேட முனைந்தது. அதேசமயம், கர்நாடகம் இத்தாக்குதல்களின் வழியாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை சிறிது காலம் எல்லோரும் மறைக்கும்படி செய்துவிட்டது.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ஆம் ஆண்டு வெளியாகும்வரை நிலைமை இப்படித்தான் நீண்டது. இதற்கிடையில்தான் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டி, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததும்; நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் தலைமையில் தமிழகம், கர்நாடகம் கேரளம் பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் முதலமைச்சர்களை உறுப்பினர்களாகக்கொண்டு ’காவிரி ஆணையம்’ ஒன்று உருவாக்கியதும் நடந்தன.

அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்ணாவிரப் போராட்டத்தால் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியானது. 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘காவிரி ஆணையம்’ எவ்வித அதிகாரங்களுமற்ற ஒன்றாக இருந்ததால், அதனால் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை.

இச்சூலலில்தான், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. இது காவிரியின் மொத்த அளவை 740 டி.எம்.சி ஆகக் கணக்கிட்டு, அதில் 419 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு ஒதுக்கி தீர்ப்பளித்தது. இந்த 419 டி.எம்.சி.யில் கர்நாடக எல்லையான பில்லிக்குண்டுலிருந்து பூம்புகார் வரையிலான 227 டி.எம்.சி நீரை கழித்துவிட்டு, மீதமுள்ள 192 டி.எம்.சி.யை கர்நாடகம் கொடுக்க வேண்டும் என அதில் வரையறுக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா வழக்கம்போல் இத்தீர்ப்பையும் நிராகரித்து, உச்சநீதிமன்றம் சென்றது.

இவைகளின் நீட்சியாய்தான், இப்போது மறுபடியும் காவிரி தலைவிரித்தாடிக் கொண்டுள்ளது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் மீதான வாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் வழக்கம்போலவே ‘தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுங்கள்’ என கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா வழக்கத்திற்கு மாறாக, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்தது. அதையும் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா ‘மிகுந்த மனவேதனையுடன்தான்’ தான் இதனைச் செய்வதாக சொல்லிக் காட்டினார். ஆனால் சித்தாரமையாவின் அறிவிப்பை அடுத்து, மீண்டும் 1991ஆம் ஆண்டைப் போன்ற ஒரு கோரத் தாண்டவம் தமிழர்களின்மீது இன்று கர்நாடகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

வழக்கம்போல் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அவர்களின் இருப்பிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள், பலவந்தமாக இடப்பெயர்வு செய்யப்பட்டனர். இந்த எல்லாவற்றின் உச்சமாக தமிழர் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட காணொளியும், பேருந்து ஓட்டுநரான வயது முதிர்ந்த நபர் தமிழர் என்கிற ஒரே காரணத்துக்காக கர்நாடக இனவெறிக் கும்பலால் கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்வும் தமிழகத்தை கொந்தளிக்க வைத்தது.

கன்னடத்தினரின் இந்தப் போக்குகள் தமிழ் உணர்வாளர்களையெல்லாம் தட்டியெழுப்பியது. விளைவு, நாம் தமிழர் கட்சி சென்னையில் நடத்திய பேரணியொன்றில் ‘விக்னேஷ்’ என்ற இளைஞர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்திக்கொண்டு இறந்துபோனான். காவிரிக்கு நீதி வேண்டி தமிழன் உயிர்த் தியாகம் செய்தான் என்கிற வரலாற்றைத் தவிர, விக்னேஷின் மரணத்தால் தமிழகத்திற்கு வேறொன்றும் கிடைத்துவிடவில்லை. வேறுவிதமாகச் சொன்னால், 1991இல் கன்னடர்கள் தமிழர்களைக் கொன்றனர், இன்று தமிழன் தன்னைத் தானே கொளுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான்.

இந்தக் கொதிநிலையில்தான் உச்சநீதிமன்றம் 2016 செப்டம்பரில், ‘வரும் செப்டம்பர் 27ம் தேதி வரை தமிழகத்திற்கு நாளொன்றிற்கு 6000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அத்தோடு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பரிந்துரை செய்த ‘காவிரி மேலாண்மை வாரியத்தை’ இன்னும் ஏன் மத்திய அரசு அமைக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி, இன்னும் நான்கு வாரங்களுக்குள் ‘மேலாண்மை வாரியம்’ அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கெடு விதித்தது.
இது தமிழகத்திற்கு கிடைத்த இன்னொரு முக்கியமான வரலாற்று வெற்றியாகும். ஆனால் கர்நாடகா தனக்கே உரித்தான பாணியில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையும் ஏற்க மறுத்ததோடு, இந்தியாவின் ஜனநாயகத் தன்மையையே கொலை செய்யும்விதமாக புதிய காரியத்தை துணிந்து செய்தது.

தினமும் 6000 கன அடி காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்று கர்நாடகா தனது ‘சட்டமன்றத்திலேயே’ தீர்மானம் நிறைவேற்றியது, இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனே உச்சநீதிமன்றம் கர்நாடகத்தின் இந்தப் போக்கைக் கண்டித்து, மீண்டும் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டது. ஆனால் சலசலப்புகளைக் கண்டு அஞ்சாத அரசாயிற்றே கர்நாடகா. அதனால் உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையையும் அது காற்றில்தான் பறக்கவிட்டது.

இப்படியாகத் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி மத்திய அரசிற்கு ஆணையிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என அறிக்கை அளித்துள்ளது. ஆனால் இந்த அறிக்கை வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்பு வரை, மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டுள்ளோம் என்றுதான் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். மத்திய அரசின் கட்சிக்காரர்கள் அனைவரும் தொலைக்காட்சி விவாதங்களில் நீர்வளத்துறை அமைச்சரின் அறிக்கைகளையே குறிப்பிட்டு வாதிட்டு வந்தனர். ஆனால் மத்திய அரசு திடீரென பல்டி அடித்துவிட்டது.

தண்ணீர் தர மறுத்து சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றும் கர்நாடகத்தின் ஆளும் அரசிற்கு ஒரு அரசியல் உள்ளதுபோல், மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது எனக்கூறும் மத்தியில் ஆளும் அரசிற்கும் ஒரு அரசியல் உள்ளது. இரண்டு அரசியலும், 2017இல் வரவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் என்கிற புள்ளியில் சங்கமித்துவிடுகின்றன.

1991இல் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கும், இப்போது தமிழர்கள் கர்நாடகவில் தாக்கப்பட்டதற்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. அன்று நடந்தது இனவெறித் தாக்குதல், இன்று நடந்தது ‘காவி வெறித்’ தாக்குதல் என்கிற உண்மை பெரும்பான்மை கருத்தாக உருவெடுத்துள்ளது. எப்படியும் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்கிற ஒரே நோக்கில் பாரதிய ஜனதா கட்சியினர், கர்நாடகத்தில் வெளிப்படையாகவே வன்முறையில் ஈடுபட்டனர். அதன் அரசியல் வடிவமாகத்தான் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கிறது. ஆனால் இதே மத்திய அரசுதான் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்தபோது, ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மீறமுடியாது’ எனக்கூறியதை நாம் மறந்துவிடக் கூடாது.

அதேபோல் கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசிற்கும், தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கமே பிரதானமாக இருப்பதால், சித்தாரமையாவும் மோடியின் பார்முலாவையே பின்பற்றுகிறார். தமிழகத்தின் பா.ஜ.க.வினரோ, ஏதோ கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்தான் சரியில்லை என்பது போலவும், அதனால் அந்த அரசை கலைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துக்கொண்டுள்ளனர். தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமெனில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசை என்ன செய்வது?

தீர்ப்பளித்து, ஆணையிட்டு, கெடு விதித்து என எல்லாவற்றிலும் தோற்றுப்போன உச்சநீதிமன்றம் இப்போது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் மீதான தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துவிட்டது. ஆனால் கர்நாடகவை ஒரு சம்பிரதாயத்திற்காக, ‘தீர்ப்பு வரும்வரை தமிழகத்திற்கு 2000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும்’ என ஆணையிட்டுள்ளது. இதில் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படியான 205 டி.எம்.சி என்ன ஆனது? இதற்குச் சற்று முன்னர் உச்சநீதிமன்றமே கூறிய 6000 கன அடி நீர் என்கிற தீர்ப்பு எங்கு சென்றது? என்பதற்கெல்லாம் இங்கு விடையே கிடைக்காது.

எல்லாவிதமான அதிகாரங்களும் உள்ள உச்சநீதிமன்றம், காவிரி விவகாரத்தில் வரலாறு முழுக்க கர்நாடகத்திற்கு அடிபணிந்து செல்வது அவலமானதாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஒரு மாநில அரசு கட்டுப்படவில்லையெனில், எந்ததெந்த துறைகளில் அது கட்டுப்படவில்லையோ அத்துறைகளை ‘இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 356-ன் படி’ குடியரசுத் தலைவர் கையிலெடுத்துக் கொள்ளவேண்டும். ஆனாலும் கர்நாடகத்தின்மீது இப்படியான எந்தச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ இதுநாள்வரை எடுத்ததில்லை. அதுதான் சட்டமன்றத்திலேயே ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது’ என தீர்மானம் நிறைவேற்றும் எல்லைக்கு கர்நாடகாவை துணிவு கொள்ளச்செய்திருக்கிறது.

இப்போதும் குடியரசுத் தலைவர் நினைத்தால், சம்பந்தப்பட்ட துறைகளை மட்டுமல்ல, கர்நாடக அரசையே கலைக்க இயலும். ஆனாலும் மத்திய அரசு செய்யாது. அப்படி மத்திய அரசு செய்ய முற்பட்டால், மேலாண்மை வாரியம் விடயத்தில் மத்திய அரசு நீதிமன்றப் புறக்கணிப்பு செய்தது விவாதமாகும். ஆக மத்திய பா.ஜ.க அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசோடு கைகுலுக்கும் அரிய காலமிது.

தமிழகமோ எல்லாவிதத்திலும் தன் பக்கம் நியாயத்தை வைத்துக்கொண்டு, காவிரி நீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய இடத்திலுள்ள ஆளும் அ.தி.மு.க. அரசோ, அப்பல்லோ வாசலில் அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டுள்ளது. காய்ச்சல் என்று சொல்லிச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22, 2016இல் சிகிச்சைக்குச் சென்ற முதல்வரை இன்றளவும் (நவம்பர் 22, 2016) யாராலும் பார்க்க இயலவில்லை. அவ்வப்போது அப்பல்லோ வெளியிடும் அறிக்கைகளின் வழியாக மட்டுமே, முதலமைச்சர் ஜெயலலிதா நலத்துடன் இருப்பதாக அறிய முடிகிறது. என்னதான் முதலமைச்சரின் துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைத்தாலும், ஜெயலலிதா பணிக்குத் திரும்பும்வரை தமிழகத்தில் ஆட்சியென்பது நிச்சயம் நடைபெறாது என்பது யாவரும் அறிந்ததே.

தமிழகம் இப்போது நிர்கதியான நிலையில் தவித்துக்கொண்டுள்ளது. தமிழர்கள் வழக்கம்போல் வீதிகளில் ‘காவிரி நீர் வேண்டி’ முழக்கமிட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தின் பலமிக்க எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டதால் எவ்விதமான பலன் கிடைக்கும் என்பது ஒருபுறமிருக்க, கூட்டத்தை தி.மு.க நடத்துகிறது என்கிற ஒரே காரணத்திற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சில கட்சிகள் நிராகரிப்பதாக அறிக்கை கொடுத்துள்ளனர். இதுதான் தமிழகத்தின் நிலை. ஆனால் கர்நாடகத்திலோ, காவிரி என்றாலே அனைத்துக் கட்சியினரும் ஓரணியில் திரண்டுவிடுகின்றனர்.

நாம் இப்போது நமக்கான நீதியை எப்படிப் பெறுவதென்பது குறித்தும், காவிரியின் நூற்றாண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டியது பற்றியும் ஒரு தெளிவை அடைய வேண்டிய காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம். ‘நடந்தாய் வாழி காவேரி’ என்கிற வரிகளைப் போல, காவிரி நடந்து கொண்டேதான் உள்ளது. ஆனால் நதியாக அல்ல நீதிமன்றங்களில் வழக்குகளாக. இனியும் அது நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருக்கும். நாம் இவைகளுக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம்? பிரச்சினையைப் பேசும் நாம் அதற்கான தீர்வுகளை நோக்கி நகர்வது எப்போது? காவிரி நீர் பொய்த்துப் போகும் சூழலில், நாம் எதைக்கொண்டு நமது நீராதாரத்தை சரி செய்யப்போகிறோம்? என்கிற சுயவிமரிசனக் கேள்விகளை நம்மை நோக்கி நாம் கேட்க வேண்டிய கட்டம் உருவாகியிருக்கிறது.

ஆண்டுக்கு 192 டி.எம்.சி காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டாலும், நமக்கான தேவையை அது முழுமையாக பூர்த்தி செய்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. நாம் மாற்று வழிகளைத் தேட வேண்டும். மணல் கொள்ளைகளைத் தடுக்க கரம் கோர்க்க வேண்டும். மணல் மாபியாக்களுக்கு எதிரான வலுவான போராட்டத்தை நாம் முன்னெடுப்பது அவசியம். வீணாக கடலில் கலக்கும் நீரை தேக்கி வைக்கும்படியான, நமது வடிகால் வசதிகளை முறைப்படுத்த அரசிற்கு நாம் அழுத்தம் தந்தாக வேண்டும்.
ஆனால் அழுத்தம் கொடுக்க வேண்டிய நாம், அரசியல் சதுரங்கத்தில் மிக எளிதாகப் பலியாக்கப்பட்டுவிடுகிறோம். காவிரி உரிமைப் பிரச்சினை எரிமலையாய் வெடித்துக் கிளம்பியுள்ள சூழலைத் தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டுள்ளது தேர்தல் ஆணையத்தின் ‘இடைத்தேர்தல்’ அறிவிப்பு.  காவிரி நீருக்காகக் களம் கண்டவர்கள் எல்லோரும், தேர்தல் பரபரப்பில் தங்களை ஒப்புக்கொடுத்துவிட்டனர். தேதி குறிப்பிடாமால், ‘தஞ்சாவூர், அரவக்குறிச்சி’ தேர்தல்களைத் தள்ளிவைத்த தேர்தல் ஆணையம், திடீரென இந்தச் சூழலில் தேர்தலை அறிவித்ததில் எவ்வித திசை திருப்பும் அரசியலும் இல்லையென நாம் அப்பட்டமாக நம்பித்தான் ஆக வேண்டும் போல.

இடைத்தேர்தல் இன்று நடந்து முடிந்துவிட்ட சூழலில்கூட, நம்மால் காவிரியை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத அளவிற்கு பிரச்சினைகளின் பட்டியல் நம் மூளையை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. இடைத்தேர்தலில் காவிரியை மறந்த நாம், இன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற நெஞ்சடைப்பில் ஓடிக்கொண்டிருக்கோம். இதைவிடக்கொடுமை என்னவென்றால், 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் ஒழிப்பால், பிரதமர் மோடி ‘கருப்புப் பணத்தை’ ஒழித்துவிட்டார் என்று அப்பாவியாக நம்பும் மக்களாக நாம் மாற்றப்பட்டிருப்பதுதான். கார்ப்பரேட்டுகளால் உருவாக்கப்பட்ட மோடி, கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகச் செயல்படுவார் என்று நம்பும் நம்முடைய அறியாமை ஒன்று போதாதா, நாம் அரசியல் அரங்கில் வீழ்த்தப்படுவதற்கு?   
காவிரிப் பிரச்சினையில் முதலில் நாம், நம் கவனத்தைச் சிதறவிடாமல் இருப்பதே முதல் வெற்றியாகும். தூர் வாராமல் கிடக்கும் நீர் நிலையங்களையும், கட்டிடங்களாக மாற்றப்படும் நீர் நிலையங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு போராடினால்தான், நாம் நமது நீராதாரத்தையும், நமது விவசாயத்தையும் காக்க முடியும். வெறுமனே உணர்வுத் தளத்திலிருந்து கர்நாடகவை எதிர்ப்பதால், நாம் நமக்கானவற்றை முழுமையாக அடைந்துவிட முடியாது.

1924இல் 15.19 இலட்சம் ஏக்கர் நீர்பாசனப் பகுதியை தமிழகமும், 3.44 இலட்சம் ஏக்கர் நீர்பாசனப் பகுதியை கர்நாடகமும் கொண்டிருந்ததாக ‘காவிரி நடுவர் மன்றம்’ தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நடுவர் மன்றத்தின் 1991ஆம் ஆண்டின் இடைக்காலத் தீர்ப்பில் ’11.2 இலட்சம் ஏக்கர் நீர்பாசனப் பகுதியை’ கர்நாடகம் கொண்டிருப்பதாக தகவல் உள்ளது. இப்போது கர்நாடகம் 15 இலட்சம் ஏக்கர் வரை தனது நீர்பாசனப் பரப்பை அதிகரித்து, தண்ணீரை வீணாகமல் சேகரிக்க பல துணை அணைகளையும் கட்டி உள்ளது.

ஆனால் நம் தமிழகம் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக’ நீர் பாசனப் பகுதிகளை அதிகரிக்கும் முயற்சிகளைக் மேற்கொள்ளாமல், இருப்பவற்றை தக்க வைத்துக் கொள்ளவும் தவறவிட்டுள்ளது. இவற்றையெல்லாம் நாம் கண்கொண்டு பார்த்து, அரசை நோக்கி விழிப்புணர்வுக் கேள்விகளைக் கேட்டால்தான், நாம் நமது ஜீவாதாரத்தை நிலை நாட்ட முடியும். அதேசமயம் கர்நாடகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாம் வேறு போராட்டங்களையும் வலிமையாக முன்னெடுக்க வேண்டும்.
நம்முடைய உரிமையை நமக்கு அளிக்காத கர்நாடகத்திற்கு, நாம் ஏன் மின்சாரம் அளிக்க வேண்டும் என்கிற கேள்வியை நம்மில் பலர் எழுப்பியிருப்போம். ஆனால் அதற்கு எப்போது சட்ட அளுத்தம் கொடுத்துள்ளோம்?

கூடன்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் பாதிப்பு குறித்தும், அதனைச் செயலிழக்க வைக்க வேண்டும் எனவும் மிகப்பெரும் மக்கள் போராட்டம் இன்றளவும் நடந்துகொண்டுள்ள சூழலில்தான், பிரிக்ஸ் மாநாட்டில் மத்திய அரசு மேலும் இரண்டு அணு உலைகளை கூடன்குளத்தில் உருவாக்க ஆணை கொடுத்துள்ளது. அதேசமயம் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதியான இடமே இல்லை எனக்கூறி எய்ம்ஸ் மருத்துவமனையை வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்கிறது.
காவிரியை மறுக்கும் அரசு, எய்ம்ஸ் மருத்துவமனையை வேறுபக்கம் கொண்டு செல்லும் அரசு, அணுமின் நிலையத்தையும், மீத்தேனையும் மட்டும் நம்மீது சுமத்துகிறது. ஆனால் நாம் கட்சிக்கொரு நீதி பேசி பிரிந்து நிற்கிறோம்.
உண்மையில் காவிரியின் மீதான முழு உரிமை நமக்குத்தான் உள்ளது. ஆனால் நம் தமிழக அரசியலாளர்களின் தவறான அணுகுமுறையால், காவிரி இன்று கர்நாடகத்தின் பிடியில் சிக்கியுள்ளது. காவிரி, குடகு பகுதியில் உற்பத்தியாகி, தமிழகத்தின் பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் குடகு, ஹாசன், மைசூர், பெங்களூர், சாம்ரஜ் நகர் உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக 320 கிலோ மீட்டர்வரை பயணப்படும் காவிரி, தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை என இத்தனை மாவட்டங்களில் சுமார் 416 கிலோ மீட்டர் பாய்ந்து, பூம்புகாரில் கடலில் சங்கமிக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் காவிரி நதி 64 கிலோ மீட்டர் ஓடுகிறது. இப்படி நீண்டு ஓடும் காவிரியின் மொத்த தூரம் 800 கிலோ மீட்டர் ஆகும். இதன் மொத்த தூரத்தில் தமிழகத்தின் பங்கே அதிகமானது என்பதைவிட, காவிரி பிறப்பெடுக்கும் குடகுப் பகுதி தமிழகத்திற்கு உண்டானது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. ஆனால் அதுதான் வரலாற்று உண்மை.

இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் தனிமாநிலமாக துளு மொழியின் அடிப்படையில் ‘குடகு’ என்கிற மாநிலம் உருவானது. பின்னர் 1957இல் குடகு மக்கள் தங்களை யூனியன் பகுதியாக இந்தியா இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நேரு, யூனியனாக உங்களை இணைக்க முடியாது, வேண்டுமெனில் ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.

நேருவின் ஆலோசனைப்படி குடகு மக்கள், தமிழகத்துடன் இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர். ஆனால் தமிழக அரசியலாளர்கள், அதனை நிராகரித்துவிட்டார்கள். அப்போது தந்தை பெரியார் ஒருவர்தான், குடகை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென உரிமைக் குரல் கொடுத்தார். விடுதலைப் பத்திரிகையில் எழுதினார். பேரணி நடத்தினார். இருந்தும் அவரின் குரலை அலட்சியம் செய்ததின் விளைவைத்தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.
தமிழகம் குடகை நிராகரித்தைப் போன்றே, கர்நாடகமும் முதலில் நிராகரிக்கவே செய்தது. ஆனால் ‘மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா’ எனும் அறியப்பட்ட பொறியியல் விஞ்ஞானியின் கருத்தினால், கர்நாடகம் குடகை ஏற்றுக்கொண்டது. கர்நாடகம் ஒரு அறிவியல் அறிஞரின் குரலுக்கு செவி சாய்த்ததிலும், தமிழகம் சமூகவியல் அறிஞரான பெரியாரின் குரலை அலட்சியம் செய்ததிலும் இருக்கிறது காவிரி மீது பறிபோன நமது உரிமை.

தமிழகத்தில் தயாரிக்கும் மின்சாரங்களை கர்நாடகத்திற்கு அளிக்கக்கூடாது என்கிற நமது கோரிக்கையோடு, குடகை மீட்கும் கோரிக்கையும் நாம் இன்று கையிலெடுக்க வேண்டும். உத்திகளால்தான் இனி கர்நாடகத்தை அடிபணிய வைக்க முடியுமே தவிர, வெறுமனே நீதிமன்றங்களினால் அது ஒருபோதும் சாத்தியப்படாது. காவிரி நீர் மட்டுமல்ல, காவிரி நதியே நமது உரிமைதான்.
-பழனி ஷஹான்

(இக்கட்டுரையின் சுருக்கம் 2016 நவம்பர் மாத ‘சேனாதிபதி’ இதழில் வெளியாகியது)








Saturday, 1 April 2017

மெரினா புரட்சி

மிழகத்தின் வீதிகள் அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இன்று மிகப்பெரும் மக்கள் புரட்சியைச் சந்தித்திருக்கிறது. போராட்டத்திற்கே வராதவர்கள் ‘வாடி வாசல் திறக்கும்வரை வீடு வாசல் போகமாட்டோம்’ என கொள்கை சபதமிட்டனர். ஜல்லிக்கட்டில் தொடங்கி தமிழர்களின் பறிபோன அத்தனை உரிமைகளையும் மீட்டெடுக்கும் களமாக மாறிப்போனது ‘தைப் புரட்சி.’
தென்தமிழகத்தில் மட்டுமே நடத்தப்படும் ஜல்லிக்கட்டிற்கு தலைநகர் சென்னை தொட்டு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஆதரவுப் போராட்டங்கள் வலுப்பெற்றன. குறிப்பாக கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் சாலைகளை நிறைத்தது. தமிழகத்தில் மூன்றாண்டுகளாகத் தொடரும் ஜல்லிக்கட்டிற்கான தடையை உடைத்தெறிந்துவிட்டது, தைப் புரட்சி. அந்தத் தைப் புரட்சியின் மையமாகவும், பிரதானமாகவும் இருந்தது மெரினாவில் கிளர்ந்தெழுந்த புரட்சியாகும்.
protest in marina beach

ஜனவரி 8ஆம் தேதி, ஜல்லிக்கட்டிற்காக ஒரு தொண்டு நிறுவனம் மெரினாவின் களங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலைவரை நடத்திய ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்ட பேரணியின் தொடர்ச்சியில்தான் உருவெடுத்தது ‘மெரினா புரட்சி’. ஜனவரி 17ஆம் தேதி காலை சில நூறு இளைஞர்களுடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம், ஒரு புரட்சியாய் உருவெடுக்கும் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
முதல்நாளின் இரவில் நான் சென்று பார்த்தபோது, போராட்டக்காரர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தது. நான் அங்கு சென்றதுமே களத்திலிருந்தவர்களுடன் இணைந்துகொண்டேன். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்பதுதான் அப்போது அங்கிருந்த பிரதான கோரிக்கையாக இருந்தது. போராட்டக் குழுவினர் விவேகானந்தர் இல்லத்தின் எதிர்ப்புறமும், காவல்துறையினர் விவேகானந்தர் இல்லத்திலிருந்து களங்கரைவிளக்கம் வரையிலும் திரளாக இருந்தனர்.

காலையிலிருந்து தொடர்ந்துகொண்டிருந்த போராட்டக் குழுவினருடன், அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நள்ளிரவு 1 மணி அளவில் அமைச்சர் ஜெயக்குமார் வர உள்ளதாக, தகவல் கிடைத்து. ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரும், மாஃபா பாண்டியராஜனும் தொலைக்காட்சிகளில் மட்டுமே பேசினரே தவிர, போராட்டக் குழுவைச் சந்திக்க வரவில்லை.
ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் பிரதமரைச் சந்திக்க உள்ளதாகவும், போராடும் இளைஞர்களின் பக்கம் மாநில அரசு நிற்கும் என்றும் அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்பை வைத்து, போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் குரலை வலுப்படுத்த போராட்டக்காரர்களில் இருந்து சிலரைத் தன்வயப்படுத்திய காவல்துறை, அவர்களைத் தங்களின் வாகனத்தில் ஏற்றிப் பேச வைத்தது. ஆனால் போராட்டத்தின் பெரும்படை அதை நிராகரித்துவிடவே போராட்டம் தடைகளற்று அப்படியே தொடர்ந்தது.


இரண்டாம் நாளில் கூட்டம் மெல்ல, மெல்ல அதிகரித்துக்கொண்டே சென்றதால், அங்கு உணவுத் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பகிரப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவு பெருமளவில் வந்து குவியத் தொடங்கின. இரண்டாம் நாளில் மதியம்வரை களத்தில் இருந்துவிட்டு, மீண்டும் இரவு நான் அங்கு திரும்பியபோது போராட்டத்தின் நகர்வுகளைக் கண்டு அதிசயித்துவிட்டேன்.
முதல் நாளோடு ஒப்பிடுகையில் கூட்டம் பன்மடங்கு அதிகரித்திருந்தது. சென்னை கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலையிலிருந்து, கண்ணகி சிலைவரை கூட்டம் பெரும் திரளாய் இருந்தது. முதல்நாள் கோஷங்கள் மட்டுமே காணப்பட்ட இடத்தில், இரண்டாம் நாளில் பறை ஒலிகள் பெரும்சப்தமாய கேட்டன. குழுகுழுவாய் இணைந்து பறை அடித்தவர்கள், அதன் தாளத்திற்கேற்ப ஆடவும் செய்தனர். முதல்நாளில் பீட்டாவிற்கு எதிராக முழங்கப்பட்ட கோஷங்கள், இரண்டாம் நாளில் முதலமைச்சர் ஓ.பி.எஸ். சின்னம்மா, மத்திய அரசு, பிரதமர் மோடி, சுப்பிரமணிசாமி போன்றோர்களுக்கு எதிராகவும் வளர்ச்சி பெற்றிருந்தது.
முதல்நாளில் மெரினாவில் மட்டும் திரண்டிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம், இரண்டாவது நாளில் திரைப்பட உதவி இயக்குனர்களின் ஒருங்கிணைப்பில் வடபழனியிலும் நடைபெற்றது. நான் மெரினாவிலிருந்து இரவு 1:30 மணிக்கு வடபழனி போராட்டக் களத்திற்குச் சென்றபோது, ஏ.வி.எம். ஸ்டுடியோ எதிரில் நூற்றுக்கணக்கானோர் தரையில் அமர்ந்த வண்ணம் போராடிக்கொண்டிருந்தனர். இந்த வடபழனி போராட்டம் 23ஆம் தேதி காலைவரை நடைபெற்றது.

நான் வடபழனியிலிருந்து மீண்டும் மெரினா வந்தபோது, கூட்டம் சற்று குறைந்திருந்தது. பறை ஒலிகள் அடங்கியிருந்தன. பெரும்பாலானவர்கள் அயர்ச்சியில் புல் தரைகளிலும், கடற்கரை மணலிலும் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். அதில் பெண்களும், குழந்தைகளும்கூட இருந்தனர். இரண்டாம் நாளின் இரவு எந்தவித எதிர்ப்புமற்று தொடர்ந்து மூன்றாவது நாளையும் எட்டியது.
மூன்றாவது நாளில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் திரளாக பைக்குகளில் அணிவகுத்த வண்ணம் மெரினாவிற்கு விரைந்தனர். கடற்கரைக்கு வரும் சாலைகள் அனைத்திலும் போராட்டக் குழுவுடன் இணையவரும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே சென்றது.
மதியம் 12:30 மணிக்கு ‘ஸ்டெல்லா மேரீஸ்’ கல்லூரிப் பெண்கள் கதீட்ரல் சாலையை அதிரவைக்கும் வண்ணம் அவர்களது போராட்டத்தைத் தொடங்கினர். ஜெமினி மேம்பாலம் வழியாக மெரினாவை நோக்கிப் பயணிக்கும் போராட்டக்காரர்கள் அனைவரும், ஸ்டெல்லா மேரீஸ் போராட்டக்காரர்களுடன் சற்றுநேரம் உற்சாகமாய் பங்கெடுத்துக்கொண்ட பின்னரே, மெரினாவை நோக்கிப் புறப்பட்டனர். அந்தளவிற்கு ஸ்டெல்லா மேரீஸ் போராட்டக்களம் உத்வேகம் பெற்றிருந்தது.
 
இந்தச் சூழலில்தான் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தோல்விகண்ட செய்தி போராட்டக் களத்திற்குக் கிடைத்தது. ‘வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், தான் எதுவும் செய்ய இயலாது’ என மோடி கைவிரித்தது தெரிந்து, போராட்டக் களம் அனல் கக்கியது. மோடிக்கு எதிரான கோஷம் விண்ணை முட்டிய நிகழ்வு அப்போதுதான் உக்கிரம் அடைந்தது. ‘மோடி மோடி கார்ப்பரேட் கேடி’ என்கிற வாசகங்கள் எல்லா மைக் குழுவினரிடமிருந்தும் ஒன்றன்பின் ஒன்றாக எழுப்பப்பட்டது.
போராட்டத்தில் வந்து குழுவாக இணைகின்றவர்களில் சிலர் தங்களுக்கென பிரத்யேக மைக்கும், வெகுசிலர் மேடையாகப் பயன்படுத்த அதற்குத் தகுந்தாற்போன்ற வாகங்களையும் கொண்டு வந்திருந்தனர். அதனால் போராட்டத்தில் பல குழுக்கள் செயல்பட்டன. ஒரு மைக்கிற்கும் இன்னொரு மைக்கிற்கும் அதிகபட்சமாக 300 மீட்டர் இடைவெளி இருந்தன. எனவே கோஷங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவிற்கு எளிதாக பரிமாறிக்கொள்ளப்பட்டன.
‘ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்க நள்ளிரவில் திறக்கப்படும் நீதிமன்றத்தின் கதவுகள், இத்தனைபேரின் உணர்வுகளுக்காக ஏன் உடனடியாகத் திறக்கப்படக்கூடாது? காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, மத்திய அரசை உச்சநீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்த மோடி அரசிற்கு, ஜல்லிக்கட்டிற்கும் ஏன் அதுபோல சொல்ல இயலாமல் போனது?’ என்று சூரியன் உச்சியில் இருக்கும் அந்தவேளையிலும் பலகுரல்கள் உரத்து கேள்வி எழுப்பின. இந்தக் கட்டத்திலிருந்து போராட்டத்தின் கோஷங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வலுப்பெற்று நின்றது.
தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தைத் தொடர்ந்து எழுத்தாளர் இலட்சுமி சரவணக்குமார் தனது ‘யுவ புரஸ்கார்’ விருதைத் திருப்பியளிப்பதாக முகநூலில் பதிவிட்டார். அதுபோலவே மறுநாள் அவர் தனது யுவபுரஸ்கார் விருதைத் திருப்பியும் அளித்துவிட்டார். ஆனால் பிற தமிழ் எழுத்தாளர்கள் யாரும் இப்போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு பங்குகொள்ளவில்லை. இலட்சுமி சரவணக்குமாரின் செயல்பாட்டைத் தொடர்ந்து, ‘சாகித்ய அகாடமி’ விருதுபெற்றவர்கள் களத்தில் இறங்குவார்கள் என எழுந்த எதிர்பார்ப்பு உருவம்கொள்ளாமலே கடந்துவிட்டது.
மூன்றாம் நாள் போராட்டத்தில் மதியத்தோடு சென்றுவிட்ட நான், அதன்பின் மீண்டும் நான்காம் நாளின் மதியத்தில்தான் மெரினாவிற்குச் சென்றேன். அப்போது பெண்களுக்கு கழிப்பறை வசதிதான் அங்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. இதனால் அதுகுறித்து செய்திகள் பரப்பியதைத் தொடர்ந்து, அன்று மாலையே ‘மொபைல் டாய்லெட்’ அமைக்கும் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுவிட்டன.
போராட்டம் எவரெஸ்டைப் போல வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நிலையில், மெரினாவில் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என தமிழகத்தின் பிற பகுதிகளில் போராடுபவர்களிடம் காவல்துறையினர் கூறி, எல்லோரையும் கலைந்துபோகச் சொல்லியுள்ளனர். இது சீர்காழி, தஞ்சை, பெரம்பலூர், கோவை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. அதனால் மெரினாவில் போராட்டம் தொடர்ந்து கொண்டுதானுள்ளது என்கிற உண்மையை சமூக வலைத்தளங்களில் பரப்பியதோடு, தமிழகத்தின் பிறபகுதிகளில் இருக்கும் போராட்டக் குழுக்களை இணைக்கும் முயற்சி பலரால் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து கலைந்து சென்றவர்கள் பலரும், மீண்டும் இரவில் களத்திற்குத் திரும்பினர்.
முதல்நாளில் ஆயிரத்திற்கும் நிகரான காவலர்கள் அணிவகுத்திருந்த கடற்கரைச் சாலையில், நான்காம் நாளான 20.01.2017 அன்று நூறுபேர்கூட இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு காக்கித் தொப்பிகளைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருந்தது. அதனால்தான் போராட்டக்காரர்களே போக்குவரத்துக் காவலர்களாக மாறி, பணி செய்தனர். உண்மையில் தன்னார்வலர்களின் பணி அளப்பரியது. காலையும், இரவும் ஆள்மாற்றி ஆள்மாற்றி அவர்கள் ஆற்றிய பணி, இந்தப் போராட்டத்தின் தூண்களில் ஒன்று. உணவு பரிமாறுதல், போக்குவரத்தை சரி செய்தல், மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், குப்பைகளை சுத்தம் செய்தல் என நீண்டபெரும் சேவையை கடமையாகச் செய்தார்கள் தன்னார்வலர்கள்.
நான்காம் நாளில் மெரீனா, போராட்டம் எனும் எல்லையைத் தாண்டி ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக மாறியிருந்தது. காணும் திசையெல்லாம் மக்கள் திரள் வியாபித்திருந்தது. சாலையின் மையத்தில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாகன அணிவகுப்பு அடிக்கடி நடந்தது. பலர் குடும்பத்துடன் நள்ளிரவிலும் உற்சாகமாய் போராட்டக் களத்தைக் காண வந்துசென்றனர்.
போராட்டக்காரர்களை ஊக்கப்படுத்தும்விதமாய், மக்கள் பாடகர் கோவன் மெரினாவிற்கு வந்து எழுச்சி பறக்கும் பாடல்களைப் பாடினார். அவரின் பாடல்களைக் கேட்க பெரும்கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. இன்னொருபுறம் திருவள்ளுவர் சிலைக்குக் கீழே ‘கருஞ்சட்டைக்’ கூட்டமொன்று பெரும்திரளாய் குவிந்து, பீட்டா அமைப்பிற்குக் பின்னாலுள்ள அரசியலைப் பற்றிப் பேசினார்கள். அவர்களின் பேச்சின் நீட்சியில் வெறுமனே பா.ஜ.க. என்றில்லாமல் அதன் அடிப்படையான ஆர்.எஸ்.எஸ். அரசியல் குறித்தும் விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அதேபோல கண்ணகி சிலை அருகே திரண்டிருந்த கூட்டம் வித்தியாசமான ஒரு பேனரைக் கையில் வைத்திருந்தது. அதில் ‘சார், கொஞ்சம் காறித் துப்பிட்டு போங்க’ என்ற வாசகத்துடன் பீட்டா அமைப்பின் ராதாராஜனின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. ‘இலவச செக்ஸ் என்றால்கூட 50,000பேர் கூடுவார்கள்’ என்று ராதாராஜன் தமிழர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை இழிவுபடுத்தியதற்காக, அவருக்கு இப்படியரு தண்டனை கொடுக்கப்படுகிறது என விளக்கியது அந்தக் குழு. மற்றொருபுறம் சுப்பிரமணியசாமியின் படத்துடன் ‘கைது செய்’ என்கிற வாசகப் பதாகையை தாங்கியிருந்த கூட்டம், ‘நினைச்சுக்கூடப் பார்க்காத, எங்க ஊருக்குள்ள; பி.ஜே.பி.யைக் கொண்டுவர, நினைச்சுக்கூடப் பார்க்காத’ என பா.ஜ.க.விற்கு எதிராக முழக்கமிட்டது.

இப்படி நான்கு நாள் கழிந்த நிலையில், ஐந்தாவது நாளில் தமிழக அரசு ‘அவசர சட்டம்’ கொண்டுவருவதாக அறிக்கை வெளியிட்டது. ஆனால் போராட்டத்தின் திசை அவசர சட்டத்தைக் கடந்து, ‘நிரந்தர சட்டம்தான்’ தீர்வு என்கிற எல்லைக்கு இரண்டாவது நாளே சென்றுவிட்டது. ஆகையால், தமிழக அரசின் அறிவிப்பு போராட்டாக்காரர்களிடையே எந்தவித தாக்கத்தையுமே ஏற்படுத்தவில்லை. இந்தத் தருணத்தில்தான் போராட்டத்தைக் அதிகாலை 5 மணிக்குள் கலைத்துவிட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் அதனை எதிர்பார்த்தபடி ஐந்தாம் நாள் இரவில் காத்திருந்தோம். ஆனால் அப்படியான எந்த ஒன்றும் அன்று நடைபெறவில்லை.
ஐந்தாம் நாளின் இரவு திருவிழாவின் உச்சம் என்று சொல்ல வேண்டும். அன்று புதிதாக வியாபாரத் தளங்கள் நிறையவே முளைத்திருந்தன. இதுநாள்வரை டீ, காபி போன்றவை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த போராட்டக் களத்தில், ஐந்தாம் நாளில் ‘ஐஸ்க்ரீம், பானிபூரி’ போன்ற கடைகளெல்லாம் நுழைந்துவிட்டிருந்தன. அதேபோல போராட்டக்காரர்களுக்காக ஒரு லாரி முழுக்க இளநீர் வந்து இறக்கப்பட்டதும் ஐந்தாம் நாள் இரவில்தான்.
ஆறாம் நாள் காலை 7 மணிவரை அங்கிருந்துவிட்டு திரும்பிய நான், மீண்டும் மாலைதான் சென்றேன். அதற்கிடையில் மறுநாள் சட்டமன்றக் கூட்டம் நடைபெறப் போவதாக வெளியான அறிவிப்பும், ஹிப்ஹாப் ஆதி போராட்டத்தைவிட்டு விலகுவதாக வெளியான தகவலும் புதிய விவாதங்களை எழுப்பியிருந்தது.

‘பெப்சி கோக்கிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷமிடுகின்றனர்’ என்றும், ‘தேசியக்கொடியை அவமதிக்கின்றனர்’ என்றும் கூறி ஆதி ஆட்டத்தைவிட்டு வெளியேறினார். ஆனால் தேசியக்கொடியை அவமதிக்கும் எந்தச் செயலுமே எங்குமே நிகழவில்லை. இன்னொன்று, ஹிப்ஹாப் ஆதி போராட்டத்தைத் தொடங்கியவர் ஒன்றும் அல்ல. எல்லாம் தொடங்கப்பட்ட பின்னர் களத்திற்கு வந்து சிறிதுநேரம் பேசிவிட்டுச் சென்றதே அவரின் ஆகப்பெரும் போராட்டம். இதில் அவர் விலகுவதை விளம்பரப்படுத்தியது அப்பட்டமான அரசியல் பின்புலம் கொண்ட ஒன்றுதான்.
மேலும் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ் உள்ளிட்டவர்களும் திடீரென ஜல்லிக்கட்டுப் போராட்டம் நிறைவடைந்துவிட்டதாக அறிக்கையை வெளியிட்டனர். உண்மையில் இவர்களின் பெயர்களே அப்போதுதான் வெளியே தெரிகிறது. இன்னொன்று ‘அவசர சட்டம்’ கொண்டுவரப்படும் என்கிற மாநில அரசின் அறிவிப்பை மட்டும் வைத்து, சட்டம் சட்டசபைக்கே வராததற்கு முன்னர், அதைப் படித்துக்கூட பார்க்காமலேயே அதன்மீது நம்பிக்கைகொள்ளும் இவர்களின் செயல்களைச் சந்தேகிக்காமல் இருக்க இயலாது.
நான் மாலை களத்திற்குச் செல்ல மந்தைவெளி இரயில்நிலையம் சென்றபோது, அங்கு கூட்டம் இயல்பிற்கு மாறாக இருந்தது. இரண்டு இரயில்களைவிட்டு மூன்றாவது இரயிலில்தான் பயணிக்க முடிந்தது. அதுவும் மூச்சை அடைத்துக்கொண்டுதான் செல்ல இயன்றது. மந்தைவெளியில் ஏறிய நான், திருவல்லிக்கேனியில் இறங்கி இரயில் நிலையத்தைவிட்டு வெளியே செல்ல திணறிப்போய்விட்டேன். அப்படியரு கட்டுக்கடங்காத கூட்டம் அன்று அலைமோதியது.
இரயில்களின் ஜன்னல்களில் தொற்றிக்கொண்டெல்லாம் பலர் பயணித்தனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தின்போதுகூட இரயில் நிலையத்தில் இப்படியரு கூட்டத்தை நான் பார்க்கவில்லை. கூட்ட நெரிசலில் சிலருக்கு காலில் இரத்தம் வழிந்ததைப் பார்க்க முடிந்தது. பலர் முண்டியடித்துக்கொண்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டுமென்பதில் முனைப்பு காட்டினர். அப்போது திடீரென உருவெடுத்த தன்னார்வலர்கள், மனிதச் சங்கிலி அமைத்து வெளியே செல்பவர்களுக்கும், உள்ளே வருபவர்களுக்கும் வழிவகை செய்துகொடுக்க ஆரம்பித்தனர். உண்மையில் இந்தக் காட்சிகளெல்லாம் என்னைப் பெரிதும் நெகிழ வைத்தன. ‘யார் இவர்கள்? எப்படித் திடீரென மக்கள் சேவகர்களாக மாறினார்கள்?’ என்கிற கேள்விதான் போராட்டத் தன்னார்வலர்களைப் பார்க்கும்போது எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.
ஆறாம் நாள் மாலை கூட்டத்தின் எல்லை நேப்பியர் பாலத்தையும் தாண்டி நின்றது. அண்னா மற்றும் எம்.ஜி.ஆர். சமாதியில்கூட சிலர் மைக் வைத்துப் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இந்தக்கூட்டம் நேரம் செல்லச் செல்ல குறைந்துகொண்டே சென்றது. மாலை ஆறு மணிக்கு இலட்சக் கணக்கில் இருந்த கூட்டம், எட்டு மணிக்கெல்லாம் ஆயிரத்திற்குச் சுருங்கியது. பிறகு, 11:30 மணி அளவில் கூட்டம் 5000க்கும் குறைவாக மாறியது. மெல்ல மெல்ல பலர் வெளியேறினர். கூட்டத்தின் திரட்சி, விவேகானந்தர் இல்லத்திலிருந்து கண்ணகி சிலைவரை மட்டுமே இருந்தது.
இரவு 12 மணிக்கு விவேகானந்தர் இல்லத்திற்கு எதிர்ப்புறம், கடற்கரை உட்புறச் சாலையில் நின்றிருந்த நீளமான வாகனமொன்றில், பெரிய டிஜிட்டல் திரையில் ஒரு வீடியோ ஒளிபரப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கு சென்று பார்த்தபோது, அதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுத் திருவிழாவின் காணொளிகள் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன. டிஜிட்டல் திரையில் சீறிவரும் காளையைக் காணும் கூடியிருந்த கூட்டம், உற்சாகக் குரலெழுப்பி அதை வரவேற்றது. இதற்குப் பிறகு திரண்டிருப்பவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும்விதமாக, அந்த வாகனத்திலேயே மேடை வசதி செய்து தரப்பட்டது. பின் ஒவ்வொருவராய் சென்று ஒரு நிமிடம், இரண்டு நிமிடமென கர்ஜித்துவிட்டுத் திரும்பினர்.

இதற்கிடையில் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் குரல்கேட்டு, அந்தக்கூட்டத்திற்குச் சென்றேன். தெளிந்த அரசியலில் அப்பெண் பேசியதைப் பார்க்கும்போது, அவர் ஒரு புரட்சிகர அமைப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பிறகு மீண்டும் டிஜிட்டல் திரை வைத்திருந்த வாகனத்திற்குத் திரும்பியபோது, அங்கு வசனமற்ற நாடகமொன்றை சிலர் அரங்கேற்றிக்கொண்டிருந்தனர்.
ஜல்லிக்கட்டு தொடங்கி விவசாயிகளின் தற்கொலை, காவிரிப் பிரச்சினை, அணு உலை ஆபத்து, மீத்தேன் திட்டம் என எல்லாவற்றையும் உடல் அசைவுகளாலேயே உணர்த்திய அவர்களின் நடிப்பு, கூடியிருந்த கூட்டத்தின் களைப்பை பெருமளவு நீக்கி உற்சாகமளித்தது. இதில் தன் கையில் மிக்சர் பொட்டலம் வைத்திருந்த கதாபாத்திரம் தோன்றும்போது மட்டும் கைதட்டல்கள் அதிர்ந்து கேட்டன. இந்த நாடகம் முடியும்போது மணி 3 ஆகியிருந்தது.
நாங்கள் சிலர் மெல்ல நடந்து ஜெயலலிதா சமாதிக்குச் சென்றுவிட்டு திரும்பிய பொழுதில்தான், கண்ணகி சிலை அருகே காவல்துறையினரின் எண்ணிக்கை கூடியிருப்பதைக் கவனித்தோம். பிறகு அப்படியே போராட்டத்தின் மையப்பகுதிக்கு வந்தபோது, பெரியார் மாளிகையில் காவலர்களின் வாகனங்கள் அதிகமாகச் செல்வதைப் பார்த்தோம். அதிகாலை 4:30 மணிக்கு, பெரியார் மாளிகையில் காவலர்கள் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
அதைக்கடந்து சென்றபோது, விவேகானந்தர் இல்லத்திலும் இதுபோன்றே காவலர்கள் அணிவகுத்திருந்தனர். சற்றுத்தள்ளி செல்லச் செல்ல காவலர்கள் கூட்டம் பெருகிய வண்ணமிருந்தது. மிகச்சரியாக 5 மணிக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையை ஆக்கிரமித்த காவல்துறை, அந்த வழியாக வரும் வாகனங்களைத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தது.

பெரியார் மாளிகையில் போலீஸ் குவிக்கப்படுவதை அறிந்ததும், அதுகுறித்து ஊடகங்களுக்குத் தகவல் அளித்தோம். ஆனால் ஊடக நிருபர்கள் பெரியார் மாளிகை கேட்டின் முன்பே நின்றிருந்தும்கூட, அவர்கள் கேமராக்களைப் பின்புறமாகத் திருப்பி காவல்துறையின் படைக் குவிப்பைக் காட்ட முனைப்பு காட்டவில்லை. அதிலேயே நடக்கப் போகும் விபரீதம் ஓரளவு புரிந்துவிட்டது. காவல்துறையினரின் படை குவிப்பை புகைப்படம் எடுக்கப்போன என்னையும், அங்கிருந்த சில காவலர்கள் தடுத்துவிட்டனர். போராட்டக்காரர்கள் ஒரு எல்லைக்குள் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெளிவாகியது.
சரியாக 23.01.2017 போராட்டத்தின் ஏழாம் நாள் காலை 6:30க்கு, மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு வாகனத்தில் ஏறி பேசத் தொடங்கினார். தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவர உள்ளதால், உங்கள் போராட்டம் வெற்றியடைந்துவிட்டது. நீங்கள் இதற்குமேல் போராட வேண்டாம் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறிவிட்டு இறங்கிவிட்டார். அதனால் போராட்டக்காரர்கள், அவசரச் சட்டத்தின் நகலைக் கேட்டனர். அதற்கு துணை ஆணையர் ஒரு காகிதத்தைக் காட்டினார். அதில் அரசு முத்திரையும், கையெழுத்தும் இல்லை என்று போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து துணை ஆணையரோ எல்லோரையும் கலைந்துபோகச் சொல்லி மிரட்ட ஆரம்பித்தார். அதனால் போராட்டகாரர்கள் முதலில் அரைநாள் அவகாசம் கேட்டனர். பின்னர் அது இரண்டு மணிநேரமாகச் சுருங்கியும்கூட, காவல்துறை அதை ஏற்கவில்லை. சற்றுநேரத்திற்கெல்லாம் போராட்டத் தன்னார்வலர்களை நோக்கி தனது தடியைக் காவல்துறை பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டது. பிறகு இரும்புத் தடுப்புகளைத் தள்ளிவிட்டு, போராட்டக்காரர்களின் இடத்திற்குள் நுழைந்த காவலர்கள் தங்களது கண்மூடித்தனங்களை கட்டவிழ்த்துவிட்டனர். பெண்களும், குழந்தைகளும்கூட தடியடிக்கு ஆட்பட்டனர். பலரைக் காவலர்கள் பிடித்து இழுத்தும், குண்டுகட்டாகவும் வெளியேற்றினர். சிலரைக் காவல் வாகனத்தில் ஏற்றிக் கைதும் செய்தனர்.
பின்னர் சிதறுண்ட கூட்டம் பெரும்பகுதி சாலைகளில் வெளியேற, மீதமிருந்தோர் கடலை நோக்கி உள்ளே சென்றுவிட்டனர். கடலை நோக்கிச் சென்றவர்களையும் காவல்துறை விரட்டியதால், அவர்கள் வேறு வழியற்று கடல் நீருக்குள் இறங்கி நின்று போராட ஆரம்பித்தனர். மெரினா புரட்சியின் அபாயகரமான நிமிடங்கள் இதுதான்.
கடல் நீரில் நின்று போராட்டத்தைத் தொடர்ந்த நபர்களை காவல்துறை நெருங்கிப் பேசியபோது, அவர்கள் நெஞ்சுரத்துடன் நீரில் இன்னும் சற்று பின்னோக்கிச் சென்றனர். பிறகு சிறிது நேரத்தில் மீனவ மக்கள் உள்ளே புகுந்து இளைஞர்களுக்கு தோள்கொடுத்து அரணாக நின்றனர். அதில் குறிப்பாக மீனவப் பெண்கள் முன்னணியில் நின்று காவல்துறையினரைப் பின்னோக்கி நகர வைத்து, நீரில் இருந்த இளைஞர்களைக் கரைக்கு கொண்டுவர உதவினர். அதன்பின்னர் கடல் போராட்டத்தில் இருந்தவர்கள் அச்சம் தரும் கட்டத்தைக் கடந்துவிட்டனர்.

நான் உட்பட சிலர் கடலுக்குள் இருப்பவர்களுடன் இணைவதற்காக முயற்சி செய்து, அண்ணா சாலையின் வழியாகப் பயணித்து நேப்பியர் பாலத்தை அடைந்தோம். அண்ணா சமாதி வழியாக கடற்கரைக்குள் நுழைந்துவிடலாம் என்பதுதான் திட்டம். ஆனால் நேப்பியர் பாலத்திலேயே தடுக்கப்பட்டு, திருப்பியும் விடப்பட்டோம். அதனால் மந்தைவெளி வழியாக வந்து சௌத்கெனால் ரோட்டில் பயணித்து சாந்தோம் நெடுஞ்சாலையை அடைந்தோம். அதிலிருந்து ஒரு ஒற்றையடிப்பாதையில் சென்று லூப் ரோட்டிற்குச் சென்றோம். அது சாந்தோம் தேவாலயத்தின் பின்புறப் பக்கமாகும். லூப் ரோட்டிலிருந்து கடலுக்குள் செல்லும் மணற்பரப்பில் இறங்கி நடந்தோம்.
ஒரு 500மீட்டர் நடைபயணத்திலேயே காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால், செய்வதறியாது பின்வாங்கிவிட்டோம். அந்தநேரத்தில் மீனவர்களின் உதவியால், படகில் ஏறி கடலுக்குள் சென்றோம். படகு புறப்படும்போது, காவல்துறையினர் தடுக்கவே செய்தனர். ஆனால் மீனவர்களின் துணிச்சல் மிகுந்த பேச்சிற்கு முன்னால் காவலர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. நான் உட்பட சிலர் காலை 9:40 மணிக்கு, கடல் போராட்டத்தின் மையப் பகுதியிலிருந்தவர்களுடன் இணைந்துகொண்டோம்.
 அப்போது காவல்துறை சற்று தூரம் தள்ளித்தான் நின்றிருந்தது. சிறிதுநேரத்தில் மூன்று படகுகளில் காவல்துறையினர் கடல்வழியாகச் சுற்றி வந்தனர். ஆனால் பலத்த எதிர்ப்பு இருந்ததையட்டி அவர்கள் கரையிலிருந்த காவலர்களுடனே சென்று ஐக்கியமாகிவிட்டனர். அதன்பின்னர் 10:30 மணியளவில் மீண்டும் காவல்துறை நெருங்கி வந்தபோது, பழையபடி போராட்டக்காரர்கள் கடலுக்குள் இறங்க வேண்டி வந்தது. கடலுக்குள் இறங்கி நின்றோம். ஆனால் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஏதோ பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அழைப்பு கொடுத்தார். அதனை ஏற்று போராட்டத்தின் முன்வரிசையில் இருந்தவர்கள், அவருடைய பேச்சிற்கு செவிகொடுத்தனர்.


அதனையட்டி போராட்டக் குழுவிலிருந்த வழக்கறிஞர்கள் சிலரை அனுப்பி பேசவைத்தோம். பேச்சுவார்த்தையின் முடிவில், உங்கள் தரப்பிலிருந்து காவல்துறையினர்மீது தாக்குதல் நடத்தாத வரைக்கும், காவலர்கள் உங்களைத் தாக்கமாட்டார்கள் என்றது காவல்தரப்பு. நாம் முன்னர் இருந்தே அமைதி வழியில்தான் இருந்தோம். இனியும் அப்படித்தான் இருப்போம் என்பதை வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்திவிட்டு, கோரிக்கைகளையும் அவர்களிடத்தில் கூறினர்.
“அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம்தான் தீர்வு. கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை உடனடியாக விடுவிக்க வேண்டும். தேவையற்ற முறையில் கர்ப்பிணி பெண்கள்மீது கூட தடியடி பிரயோகித்ததற்கு காவல்துறை தரப்பிலிருந்து மன்னிப்புக்கோர வேண்டும்” என்பதுதான் போராட்டக் குழுவின் கோரிக்கையாக காவல்துறையினரிடம் முன்வைக்கப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் தொடரவே செய்தது.
ஆனால் எங்களுக்கு வெளிப்புறமான கடற்கரைச் சாலையில்தான் போர் உக்கிரத்திலிருந்தது. திடீரென பெரும்புகை கிளம்பியதைப் பார்த்தோம். பிறகுதான் ஐஸ்ஹவுஸில் பைக் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதை, உள்ளே இருந்த காவல்துறை அசிஸ்டெண்ட் கமிஷனரின் எச்சரிக்கையின் மூலமாக அறிந்துகொண்டோம்.
பிறகு எங்களின் தலைக்குமேல் ஐந்துமுறை கப்பற்படை ஹெலிகாப்டர் ரோந்து சென்றது. அதனையடுத்து வெளியே துப்பாக்கிச் சூட்டின் சப்தம் மூன்று முறை கேட்டன. கண்ணீர் புகைகுண்டுகளின் புகையும், அடர்கருப்பு புகையும் சேப்பாக்கம் மைதானம், டி.ஜி.பி. அலுவலகம், திருவல்லிக்கேனி உள்ளிட்ட பகுதிகளில் வெளியாகிக்கொண்டே இருந்ததையும் தூரத்திலிருந்து கண்டோம். அந்த நிமிடங்கள் ஒருவித அச்சம் எல்லோரையும் மிரளவைத்திருந்தது.
இதற்கிடையில் படகுகளில் தண்ணீர் பாக்கெட், பிஸ்கட், பிரட் உள்ளிட்டவைகளை போராட்டக்காரர்களுக்காக மீனவர்கள் கொண்டுவந்து அளித்தனர். அதனைப் படகிலிருந்து இறக்கி, எல்லோருக்கும் கொடுத்தனர். சிறிதுநேரம் எல்லோரும் அவைகளை வாங்கிச் சாப்பிட்டு ஓய்வெடுத்தோம். இந்தத் தருணத்தில்தான் நடிகர் லாரன்ஸை காவல்துறை அழைத்துக்கொண்டு வந்தது. லாரன்ஸ், ‘அவசர சட்டம் நமக்குக் கிடைத்த வெற்றிதான் அதனால் போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்றார். ஆனால் போராட்டக்காரர்கள் அதனை மறுத்துவிட்டனர். இதனையடுத்து ‘என்மீது நம்பிக்கையுள்ளவர்கள், என்னோடு வாருங்கள்’ என லாரன்ஸ் அழைத்ததை அடுத்து நூறு பேர் லாரன்ஸின் பின்னால் சென்றுவிட்டனர்.
இந்த நூறுபேரை வைத்துக்கொண்டுதான், லாரன்ஸ் போராட்டம் முடிந்துவிட்டதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதுபோக, மாணவர்கள் வெளியேறிவிட்டார்கள், உள்ளே இருப்பவர்கள் ரவுடிகளும் அரசியல் குழுக்களும்தான் என்று பேசினார். இது உள்ளே இருப்பவர்களிடையே ஆத்திரத்தைக் கிளப்பியது. இந்தச் சூழலில் படகில் சீமான் வந்து இறங்கினார். அவர் எதுவும் பேசாமல் கூட்டத்திற்குள் வந்து அமர்ந்தார். சிறுது நேரத்தில் இளைஞர்கள் சீமானை வெளியே போகச் சொல்லி வற்புறுத்தினர். சீமானோ, தான் போராட்டத்தில் ஒருவனாய் இருக்கிறேன் என்று சொல்லி அமர்ந்தே இருந்தார்.

இந்த மெரினா புரட்சியின் ஆரம்ப நாட்களிலிருந்தே அரசியல்வாதிகள் யாரையுமே இந்தக்கூட்டம் அனுமதிக்கவே இல்லை. பலரைத் திருப்பித்தான் அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாய் சீமானையும் பலவந்தப்படுத்தி திருப்பி அனுப்பியது கூட்டம். அதனால் சீமான் போராட்டத்தின் மையத்திலிருந்து தள்ளி, வேறொரு இடத்தில் அமர்ந்துகொண்டார். அவருடன் சிறிது நேரத்தில் இயக்குனர் சேரனும் இணைந்துகொண்டார்.
marina protest police
பிறகு படகின் மூலமாக எல்லோருக்கும் உணவு தொடர்ந்து வரத் தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததினால் ஒவ்வொரு படகும் அப்போது பெரும் சிரமத்திற்கு மத்தியில் கடலில் வருவதைப் பார்த்தோம். இங்கிருந்து கிளம்பிய ஒரு படகு, அலையின் தாக்கத்தால் செங்குத்தாகச் சென்று பின்மெல்லத் தணிந்தது. உண்மையில் அந்தளவிற்குத்தான் காற்று அப்போது இருந்தது. அந்தநேரத்தில் கடற்கரை மணல் வழியாக ஒருவர் உணவைக் கொண்டுவந்தார். அவரைக் காவலர்கள் கீழேபிடித்துத் தள்ளினர். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரைத் தூக்கிவிட முன்னேறியபோது, நான் உட்பட சிலர் தடியடிக்கு ஆட்பட்ட நிகழ்வும் நடந்தது.

மாலை 4 மணியை எட்டியிருந்த நிலையில் போலீஸ் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஆர்.ஜே.பாலாஜியை அழைத்துக்கொண்டு வந்தது. ஆனால் லாரன்ஸ்மீது இருந்த ஆத்திரத்தால், பாலாஜியை யாரும் பேசக்கூட அனுமதிக்கவில்லை. ‘பாலாஜி வெளியே போ’ என்கிற கோஷம் தொடர்ந்து எழுந்ததால், பாலாஜி உடனே வெளியேறிவிட்டார். இதன்பிறகு 4:45 மணியளவில், நீதிபதி ஹரிபரந்தாமன் வரவிருப்பதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில்தான் அவசரச் சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட செய்தியும் வந்தது.
மிகச்சரியாக மாலை 5:15க்கு நீதிபதி ஹரிபரந்தாமன் உள்ளே வந்தார். அவருடன் தோழர் தியாகுவும் வந்திருந்தார். சிறிதுநேரத்தில் ஹரிபரந்தாமன் பேசத் தொடங்கினார். தன்னைப் போராட்டக்காரர்களுடன் பேச அழைத்தபோதே தான் அவசர சட்டத்தின் நகலைக் கேட்டதாகவும், ஆனால் அது அவருக்கு இங்கு வந்தும் தரப்படவே இல்லையென்றும் தெரிவித்தார். பின்னர் சட்டத்தின் நகலைக் கொடுத்தால்தான் உள்ளே செல்வேன் என்று உறுதியாக நின்றதன் பின்னரே எனக்கு நகல் கொடுக்கப்பட்டது. இப்போது நான் இங்கு அதனுடன்தான் உங்கள்முன் நின்றுகொண்டுள்ளேன் என்றார் ஹரிபரந்தாமன்.
போராட்டக்காரர்கள் பெரும் வட்டமாய் அமர்ந்து நீதிபதியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தோம். நீதிபதி சட்டத்தின் கூறுகளை விளக்கிக் கூறத் தொடங்குகையில், இது நிரந்தர சட்டத்திற்கு நிகரானதுதான் என்பதற்கு உறுதியளித்தார். பின்னர் அரசு ஏன் இதுவரை இந்தச் சட்டத்தின் கூறுகளை ஊடகங்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ, போராட்டக்காரர்களுக்கோ தெரிவிக்காமல் இருந்தது என்பது புரியவில்லையென தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தினார். அதன்தொடர்ச்சியில் இந்தச் சட்டம் சிறந்த சட்டம்தான் என்றாலும், இதனை இன்னும் அட்டவணை 9-இல் சேர்க்கவில்லை. அப்படி சேர்க்காதபட்சத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளது என்றார்.
அட்டவணை 9 குறித்து நீதிபதி பேசிய தருணத்தில், காவல்துறையினர் திடீரெனக் கூட்டத்தை சுற்றிவளைத்தனர். அதனால் கூட்டம் முழுக்க எழுந்துநின்று காவல்துறையினரை வெளியே போகச் சொல்லி பலத்த கோஷம் எழுப்பினோம். அரசு தரப்பிலிருந்து வந்தவர்களில் நீதிபதியின் பேச்சைத்தான் கூட்டம் அமைதிகாத்துக் கேட்டது. அப்படியிருக்க கூட்டத்தில் சலசலப்பை காவல்துறை ஏன் உண்டாக்க வேண்டும் என்பது கேள்வியே.
பிறகு ஹரிபரந்தாமன் அங்கிருந்து நகர்ந்து சென்றார். நான் உட்பட சிலர் அவரைச் சூழ்ந்து சட்டம் குறித்துக் கேட்டோம். அவர் சட்டத்தின்மீதான தனது நம்பிக்கையைக் கூறினார். நாங்கள் அதைக்கடந்து காவல்துறையினரின் தடியடி குறித்துக் கேட்டபோது, அதனைத் தான் கண்டிப்பதாக வெளிப்படையாகத் தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் இதனையே அவர் வெளிப்படுத்திவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதன்பின்னர் மாலை 6:30க்கு போராட்டக்காரர்களின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள், உள்ளே வந்தனர். ‘காவல்துறையினரின் தடியடியை நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. மேலும் அமைதிவழியில் போராடுபவர்களின்மீது தடியடி நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. அவசரச் சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. எனவே போராட்டத்தை தொடர்வதும், தொடராமல் இருப்பதும் உங்களின் விருப்பம்’ என்றுகூறி விடைபெற்றது வழக்கறிஞர்களின் குழு.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து காவல்துறையினர் முற்றும் முழுதாக கடற்கரை மணலிலிருந்து வெளியேறி, கடற்கரை உட்புறச் சாலைக்குச் சென்றுவிட்டனர். நீதிபதி ஹரிபரந்தாமனின் உறுதி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் பேச்சு உள்ளிட்டவைகளை வைத்து சிறிதுநேரம் விவாதிக்கப்பட்டது. அவசர சட்டம் சிறந்த சட்டமே என்றாலும்கூட, காவல்துறையினர் கைது செய்தவர்களை விடுவிக்கும்வரையிலும், தடியடிக்கு மன்னிப்புகோரும் வரையிலும், வெளியே நடத்தப்பட்ட வன்முறைக்கு காவல்துறை பொறுப்பேற்கும் வரையிலும் நாம் போராட்டத்தை தொடரவே செய்வோம் என பெரும்பான்மை குரல் எழுந்ததினால், போராட்டம் அதன்பின்னரும் நீடித்தது. ஆனால் ஹரிபரந்தாமன் வருகையோடு போராட்டத்தை ஊடகங்களின்மூலம் அரசு முடித்து வைத்துவிட்டது.

நாள் முழுக்க கடல் மணலில் இருந்த அசதியினால் பலரும் ஓய்வெடுப்பதற்காக வீடுகளுக்குத் திரும்பினர். அப்படி இரவு 9 மணிக்கு நானும் அறைக்குத் திரும்பினேன். கடற்கரையின் உட்புறச் சாலையில் வந்துதான் வெளியேறினேன். காவல்துறையினர் கிடைத்த இடங்களில் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள். நான் அங்கிருந்து மந்தைவெளிவரை நடந்தே வந்தேன். வரும் வழியில்தான், வெளியே நடத்தப்பட்ட கோரங்களை என்னால் பார்க்க முடிந்தது.
சிவாஜி சிலை அருகே ரீப்பர் கட்டைகள் குவியலாய்க் கிடந்தன. அதனையட்டி எரிந்த நிலையில் பல பொருட்களைப் பார்த்தேன். செருப்புகள் நிறைய பிய்ந்து கிடந்தன. டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் ஓரமாய் நின்றிருந்த பைக்குகள் பெருமளவு சேதமடைந்திருந்தன. சிட்டி சென்டரின் முன்புறம் கண்ணாடிச் சில்லுகள் குவியல், குவியலாய்க் கிடந்தன. ஒவ்வொரு சிக்னலிலும் தடுப்புகளைப் போட்டு ஐம்பது காவலர்களுக்கு நிகராக நின்றிருந்தனர். மக்கள் நடமாட்டமற்று சாலை எங்கும் காவலர்களைத் தவிர, மனிதர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. பின்னர் வன்முறைக் காட்சிகளை தொலைக்காட்சிகளில்தான் பார்த்தேன்.
மறுநாளான 24.01.2017 அன்றும் போராட்டம் தொடரவே செய்தது. ஆனால் கடலுக்குச் செல்ல இயலாத வண்ணம் காவல்துறை இரும்பு வளையம் அமைத்திருப்பதாகத் தகவல் வந்தது. நான் அன்று மாலை உள்ளே செல்வதற்காக முயற்சி செய்தேன். ஆனால் காவலர்கள் முன்பைவிட அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்குமுன்பாக நாங்கள் சென்ற லூப் சாலை வழியாகவும் முயற்சி செய்துபார்த்தேன். அங்கும் காவலர்கள் பெரும் படையாகக் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போதுதான் நொச்சிக்குப்பம், நடுக்குப்பத்தில் காவலர்கள் நடத்திய வேட்டையைத் தாமதமாக அறிந்தேன். நான் அங்கிருந்தபோதே என்னை விசாரித்த காவலர்கள், பெயரைக் கேட்டனர் நான் பெயரைச் சொன்னதும், ‘உனக்கெல்லாம் இங்கென்ன வேலை’ எனச்சொல்லி இழுத்தனர். நான் வேடிக்கை பார்க்க வந்ததாகக்கூறி சிறிதுநேரத்திற்குப் பின் அங்கிருந்து விரைவாக வெளியேறிவிட்டேன்.
அதன்பின்னர் இரவு 8 மணி அளவில் போராட்டக்காரர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் வெளியேற்றப்பட்டதில் மகிழ்ச்சிதான் அடைந்தேன். நான் உள்ளே செல்ல முயன்றது, அங்கிருந்த உணர்வுள்ள சில நூறுபேரை மனதில் வைத்துதான். அவர்களுக்கான உணவினை ஏற்படுத்தி தரவும், அரசியல் பிரமுகர்களை வைத்து அவர்களை வெளியே கொண்டுவரவும்தான் நான் உட்பட சிலர் முயற்சித்தோம்.
அங்கு காவல்துறை மீண்டும் வெறியாட்டம் நடத்திவிடக்கூடாது என்று பயந்தோம். ஆனால் காவல்துறையே அவர்களை மெல்ல வெளியேற்றியது மனநிறைவைத் தந்தது. இருந்தும் போராட்டக்காரர்களை எப்படி அணுகி வெளியேற்றினார்கள் என்பது சந்தேகத்திற்குரியதே. ஒருவழியாக எட்டாவது நாளில் மெரினா புரட்சி நிறைவுபெற்றது. அதற்கு ஒருநாள் முன்பாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் முடிவுக்கு வந்திருந்தது.

இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மெரினா புரட்சியின் துவக்கத்தைப் போலவே, அதன் முடிவும் அறியப்படாமலேயே போய்விட்டது. ஆரம்பத்தில் யார் இருந்தார்கள், முடிவில் யார் இருந்தார்கள் என்பது களத்திலிருந்த என்போன்ற ஏராளானமானவர்களுக்குத் தெரியாது.
எல்லாப் போராட்டத்திலும் ஏதேனும் ஒரு தலைவர் உருவெடுப்பார்கள் அல்லது குறிப்பிடத்தகுந்த அளவில் ஒரு ஆளுமைகள் அடையாளமாகியிருப்பார்கள். ஆனால் இதில் அப்படி எந்த முகங்களையுமே காணமுடியவில்லை. இதன் பின்னாலுள்ள அரசியலை எந்த அரசியல் கட்சிகளாலும் இதுவரை இனம்காண முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். ஒருவகையில் இது மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும் இடையிலான அரசியல் சதுரங்கம் என்றொரு கருத்துமட்டும் வலுபெற்றிருக்கிறது. ஆனால் அது ஒரு கட்டத்தில் அரசின் கையைமீறி, மக்கள் எழுச்சியாய் உருவெடுத்துவிட்டது என்பதுதான் பட்டவர்த்தனமான உண்மை.
செப்டம்பர் 17, 2011இல் நியூயார்க் நகரில் உருவெடுத்த ‘வால்ஸ்ட்ரீட் போராட்டத்திற்கு’ இணையானது இந்த மெரீனா புரட்சி. வட இலத்தீன் பிராந்தியங்களில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட ‘ரெட் கார்னிவல்’ போன்ற, கொண்டாட்டமான போராட்டத்தைத்தான் இந்த மெரீனா புரட்சியில் எங்கெங்கும் காண முடிந்தது. இப்படியான கொண்டாட்டம் நிறைந்த போராட்டத்தை இந்தியா இப்போதுதான் முதன்முறையாகக் கண்டிருக்கிறது. ஒரு தலைவர் இல்லாத புரட்சியை உலகத்திற்கு தமிழர்கள் இதன்மூலம் அறிமுகப்படுத்தியுள்ளனர். யுக யுகமாய் தொடரக்கூடிய அழுத்தமான வரலாற்றை மெரினா புரட்சி ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் புரட்சி முதலில் இளைஞர்களால் தொடங்கப்பட்டிருந்தாலும், பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் என பலரும் திரண்டு இதனை மக்கள் புரட்சியாய் மாற்றிவிட்டனர். அந்தவகையில் இதனை மக்கள் புரட்சி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
இந்தப் புரட்சி நீர்த்துப் போகவில்லை. இந்தப் புரட்சியினுடைய கோரிக்கைகளின் நியாயங்கள் அப்படியே இருந்தாலும், இது வெற்றியே அடைந்திருக்கிறது. வேறொரு வகையில் சொன்னால் வெற்றிப் படிகளில் ஏறிய தருணத்தில் சற்று இளைப்பாறிக்கொண்டுள்ளது மெரினா புரட்சி. இதற்கு வேறொரு களமும், காலமும் கனியும் என்கிற நம்பிக்கைவிதை எல்லோரிடத்திலும் விதைத்திருக்கிறது.
இந்தப் போராட்டத்தின் நிறையாகவும், குறையாகவும் ஒன்றை மட்டும் என்னால் குறிப்பிட முடியும். அது அரசியல்வாதிகளை அனுமதிக்காத செயலாகும். ஆரம்பத்தில் அரசியல்வாதிகளை அனுமதிக்காமல் இருந்திருந்தாலும், இறுதியில் அரசியல்வாதிகளை அனுமதித்திருக்க வேண்டும். அப்படி சிலரை அனுமதித்திருந்தால் ஒரு வெற்றிப் பேரணி நடத்தி இதனை முடித்திருக்கலாம். அதற்கு வழியற்று வெற்றியைக் கொண்டாடாமலேயே போராட்டம் முடிவுக்கு வந்ததுதான் ஜீரணிக்க முடியவில்லை.
இது ஜல்லிக்கட்டிற்கான போராட்டம் மட்டுமல்ல, தமிழினத்தின் எழுச்சிக்கான ஒரு யுகப் புரட்சி!
– பழனி ஷஹான்

(நன்றி - உயிர்மை பிப்ரவரி 2017)
நன்றி கீற்று இணையதளம் :
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32532-2017-02-27-01-49-34