Friday, 31 May 2013

அழியா அனல் காடு – ‘சே’

 




“சே”
மரணித்த ஒருவனின்
மரணிக்காத ஓர் வடிவம்….

மனிதருள் மடிந்திட்ட
உரிமைக் கனலை, வல்லுணர்வை
மீளச்செய்த
ஓர் ஒற்றை எழுத்து !

புரட்சி எனும் மொழியை
பாரில் பலரை
பேச வைத்த எழுத்து

ஏட்டளவிலும் அகற்றிடு
ஏகாதிபத்தியத்தை
என்று
எல்லோரையும் முழங்க வைத்த எழுத்து !

அடிமைத்தனம்
எங்கு சூழ்ந்திடினும்
எதிர்த்து நின்றிடுவென
எளியோனையும் கூற வைத்திட்ட
கடலலைச் சீற்றம் !

எதேச்சதிகாரத்தின்
ஆணி வேரை உலுக்கி
பிடுங்கிய
உக்கிர எழுத்து

உலகம் முழுமைக்குமான விடுதலை
என்று உறுமி
அடிமை உள்ளங்களில் யாவும்
ஊக்கம் தந்திட்ட ஊன்று கோல்,

துணிவின் சுருக்கம் !

புரட்சி எனும் கொடி
ஏந்திய
யாவருக்கும் முகவரி
இந்த ஒற்றை எழுத்து !

அடக்குமுறையின்
அடிச்சுவடையே
அடங்க வைத்த அபாய ஒலி !

கொடுங்கோலனின்
கோட்டைக்குள் நுழைந்து
சொடுக்கிட்டு எச்சரித்த
தீப்பிழம்பு !

தோட்டாக்களை தோலுயர்த்தி
எதிர்த்து நின்ற
வீரத்தின் அகராதி !

வலைக்குள் சிக்குண்ட போதும்
அலட்டு சிரிப்பை உதிர்த்திட்ட
அஞ்சாமை !

பீரங்கிப் படையை
தெரித்தோடச் செய்த
தீரம் நிறைந்த செந்நிற
கூர் பார்வை கொண்ட
எரிகழல் மாந்தனின் முதன்மை
எழுத்து !

ஆர்ப்பரிக்கும் அகோரச் சின்னம் “சே”
என்றும்
அழியாத அனல் காடு !




 
தோழமையுடன்
பழனி ஷஹான்





.

Sunday, 12 May 2013

இடிந்தகரையில் ஒரு நாள்


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடும், போராளி அண்ணன் சு.ப.உதயக்குமார் அவர்களை இடிந்தகரையில் சந்தித்து உரையாடினோம். இடிந்தகரை மக்களின் நிலை, அவர்தம் வாழ்வியல், கல்வி, போராட்ட யுக்திகள், அம்மக்களின் மனநிலை போன்றவற்றை குறித்து அறிந்து கொள்வதற்காக, கடந்த ஏப்ரல் 7 அன்று அங்கு சென்றிருந்தோம்.
அரச பயங்கரவாதத்தை, அடக்குமுறையை முதன் முறையாக நேரில் கண்டு வந்துள்ளேன். அவர்களின் தொடர் போராட்டத்தின் 601-வது நாளில் நாங்கள் சென்று, அந்த ஒரு நாள் அவர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு வந்தோம்.

உதயகுமார் வெளிநாட்டு பணம் வாங்குகிறார், வீணாக மக்களை மூலை சலவை செய்து மக்கள் நலனை முடக்குகின்றார் என்பன போன்ற இன்னும் சில அவதூறுகளுக்கு அவரிடமே கேள்விகள் கேட்டு விடை கண்ட பொழுது, பத்திரிக்கைகள் எந்த அளவு இந்த போராட்டத்தை நசுக்க முனைகின்றது என்பது தெளிவாகியது. உண்மையில் மக்கள் நலனுக்காக போராடும் இடிந்தகரைவாசிகளின் தியாகங்கள், அரசு பயங்கரவாதத்தாலும், பத்திரிக்கையின் பாசாங்குகளாலும் திரை மறைவு செய்யப்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் மிகப் பெரும் அவலம்..!


- பழனி ஷஹான்


Friday, 3 May 2013

ஒரு நிமிடம்




வீழ்ந்து விடாதே !
விடியல் கிட்டும் சோர்வு கொள்ளாதே!

எழுந்து நின்றிடு !
ஏணிப்படிகள் காத்திருக்கின்றன தாழ்வு கொள்ளாதே !

ஒரு நாள் வரும்
உன் முகவரி உலகறிய
அதற்க்காவேனும் தோழா
ஒரு நிமிடம் !

ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய் !

உன்னை வாசிக்க
ஓர் உலகம் உண்டு
அதற்க்காவே
நீ சுவாசிக்க வேண்டும் சோதனைகளை
முயற்சிகள் பல கொண்டு !

வெற்றிகள் உண்டு உன்னில்
வெற்றுக் காகிதமாய் !
அதை நிரப்பிடு தோழனே
தன்னம்பிக்கை எனும் பேனாவில்
முயற்சி எனும் மை ஊற்றி !

இலட்சியம் கைகொள்ள ஆவலுண்டு
சாதனையை வென்றெடுக்க முயற்சிகளுண்டு
பின் ஏன் இன்னும் அச்சம்
அதில் முந்தியவர்களை கண்டு !

அவ மதிப்புகளால்
மனத் தாழ்வுக்குள் அகப்படாதே
நீ தழைத்தோங்க
உன்னை தாங்கப் போகும்
ஆணி வேர்கள் அவை !

பாறைகள் பல கடந்து
இடறுகள் பல தாண்டி
இரவு பகல் பற்பல கழித்து
பெரும் நெடிய பயணம் மேற்க்கொண்டே
நதிகள் வெல்லுகின்றன
கடலாய் மாறி !

சிற்சிறு கற்களும்
பொடி பொடி மண் துகள்களும்
மெல்ல மெல்ல சேர்புகள் கொண்டே
உயர்ந்து நிற்கின்றன மலைத் தொடர்களாய் !

செய்வதற்க்கு ஏதுமில்லையென
வெறுமை ஏமாப்பு கொள்ளாதே !
ஏதேனும் செய்திடு
வெற்றாய் கழிந்திடும் காலத்திற்க்கு
விருந்தளித்திடு
அது உனக்கு பரிசளித்திடும் !

பெரும் புத்தகத்திற்க்கு தொடக்கம்
சிறு பொட்டு மை துளிகளே !
பெரும் சாதனைகளின் தொடக்கம்
தடுமாறி விழுவதிலேயே !

தடுமாறி தடுமாறி விழுந்திடு
ஆனால் தடம் மாறி மட்டும் எழுந்திடாதே !

வழிகள் இல்லையென கவலைகள்
களைந்திடு
நீ சென்றால் அதுவே மாறும்
பாதைகளாய் !

தோழா !
ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய் !
ஒவ்வொரு நிமிடமும் உருமாறும்
நாளைய சாதனைக் களமாய் !

(தூது ஆன்லைன் இணைய தளத்தில் வெளியான எனது படைப்பு)

- பழனி ஷஹான்