அயோத்திய மண்ணில் அசுரக் கொடி
திசம்பர் ஆறில் ஏற்றிய நெறி
இந்திய இறையாண்மையை முறித்து
பூணூல் பொசுக்கிய புனிதத்தல ஒழிப்பு!
இத்தேசத்தின் இறையாண்மை இதயத்திலிருந்து
காவிக் கரங்களால் சிகப்பு நீர் சிதறியதே
மனித இறையொன்று தோற்றுவிக்கப்பட்டதனால்!
வேற்றுமையில் ஒற்றுமையே
வேதமெனப் பாடும் நாட்டிலே
மதம் மாற்றப்பட்டதே மசூதியொன்று!
உடல் உறுப்பில் சிறு சதை சிதைந்து
ஊனமுற்றுத் துடிக்கின்றது எந்நாடு
அதை வெற்றியெனக் கொண்டாடுகிறது
நாடற்ற நாடோடிக் கூட்டமொன்று!
வருடம் பிறந்தாலன்றி விழி நோக்குவதில்லை
விசும்பி அழும் மசூதியின் உறவுகள்!
வீதியில் நின்று இழப்பு ஓலமிடுவதினால்
விடியல் கிடைத்திடுமோ குருடர்களே?
விதியென்று தலையிலடித்துக் கொண்டாய்
நீதி மரித்திடாதென அம்மன்றம் ஏறியும் நின்றாய்!
கைகளில் கடப்பாரை தாங்கிய கயவர்களின்
மாறுவேடமே சுத்தியல் தாங்கியவரென்று உணர்ந்தாய்!
ஆட்சித் தலைமை முதல், தாசன் வரை
தன் சீடர்கள் பரப்பி – உன் குரலை
குருதிகளற்றதாய் நசுக்குமவன் திறனை
இசுலாமியனே நீ இன்றும் அறிந்தபாடில்லை!
கயமத்தால் கருவறுக்கப்பட்ட மசூதியின் இறப்பு
கருப்பு நாளென்று ஒரு சாயலில் கொள்ளும் வேளையிலே
அது காவிகளின் நாள் என்பதனையும்
மறந்திடாதே! மனிதமுள்ள மனிதச் சமூகமே!
கருப்பு நாளை வெண்மையாய் படரச் செய்து
காவிகளுக்கு அந்நாளை கசப்பாக்கிட
கட்டி எழுப்புவோம் மசூதியினையும்
மிதிப்புகளைத் தடுத்து குடிசைகளையும்!
ஓ காவிவாதிகளே! நீங்கள் கொண்டிருக்கும்
திரிசூலம் உங்களையே ஓர் நாள் அழிக்கும்
அதன் மும்முனைகளும் முச்சமூக
இணைப்பாய் மாறி வெகுவிரைவினிலே!
மூச்சியிழந்து துடிக்கும் அயோத்தி நிலத்தில்
பாபர் மீண்டும் பிறப்பான்
இராமரே அதனை ஏற்பான்!
இந்தியம் அன்று ஒலிக்கும் அங்கு
உன் ஹிந்தியம் மரித்து மசூதி பிறந்ததென்று!
- பழனி ஷஹான்
நன்றி: இந்நேரம்.காம் (inneram.com) இணையதளம்:
http://www.inneram.com/inneram-specials/literature/3775-converted-the-masjid.html



No comments:
Post a Comment