Friday, 28 November 2014

தொல்.திருமாவளவன் உடனான சந்திப்பு - A MEET WITH AN THOL.THIRUMAVALAVAN


                     
                                            புரட்சியாளர்.பழனிபாபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்தும் எமது தொடர்ச்சியான பயணத்தின் 12-வது மாதத்தின் ஒரு பகுதியாக, 23.11.2014 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எழுச்சித் தமிழருமான மேன்மையாளர் தொல்.திருமாவளவன் (THOL.THIRUMAVALAVAN) அவர்களைச் சந்தித்து உரையாடினேன்.
(திருமாவளவன் அவர்களுடன்)

மாலை 6:30 மணி அளவில் வேளச்சேரி அலுவலகத்திற்க்குள், நான் தோழர்கள்.ஏஜாஸ் மற்றும் தமீம் அவர்களை உடன் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். வந்திருக்கும் விடயத்தினை தெரிவித்தவுடன், எழுச்சித் தமிழரிடம் சென்று சொல்லிவிட்டு, மேலே அழைத்துப் போய் அமர வைத்தார்கள். சில நிமிடங்கள் காத்திருப்பிற்குப் பிறகு, எழுச்சித் தமிழரின் அழைப்பு வர உள்ளே சென்றோம்.
உள்ளே சென்றதும் எங்களை வரவேற்று, அமரச் செய்து, அரை மணிநேர காத்திருப்பு செய்தமைக்கு தனது வருத்ததினைத் தெரிவித்துக் கொண்டு, பேச்சைத் தொடர்ந்தார். நான் வந்திருக்கும் விடயத்தினை விளக்கிச் சொன்னதும், அவைகளைக் கேட்டுக் கொண்டு, பழனிபாபா அவர்களுக்கும் தனக்குமான சில நினைவுகளைப் பகிர்ந்தார் எழுச்சித் தமிழர். மேலும் அன்றிரவு நள்ளிரவு இரண்டு மணிக்கு விமானத்தில் கிளம்பி, மறுநாள் கனடா செல்ல இருந்தப்படியாலும், அதற்கு முன்பாக 'தமிழ் மண்' இதழுக்கு தனது தலையங்கத்தை எழுதியாக வேண்டிய பணிச் சுமைகளில் மூழ்கியிருந்த அவர், பழனிபாபா குறித்த விரிவான கட்டுரையயும், நினைவுகளையும் தான் கைப்பட எழுதித் தருவதாக உறுதி அளித்து, தனது நேரச் சிக்கலை விளக்கினார். 
அவரின் நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட நான், அவருடன் சில நிமிடங்கள் மேலும் பழனிபாபா அவர்களைப் பற்றி கேட்டுவிட்டு, சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டு எழுந்தேன். எழுந்து நின்று கை குலுக்கிக் கொண்டு நகர்கையில், எழுச்சித் தமிழர் அவர்களாகவே அழைத்து, ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோம் எனச் சொல்லி நிறுத்தினார். இன்னும் இரட்டிப்பகவே மகிழ்ந்து போய், புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்கிருந்தும், எழுச்சித் தமிழரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டும் நகர்ந்தோம்.

எழுச்சித் தமிழருடனான இந்த அழகிய சந்திப்பை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான அண்ணன் ஆளூர்.ஷாநவாஸ் (Aloor Shanavas) அவர்கள் ஏற்ப்படுத்திக் கொடுத்தார். ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கும், இந்த சந்திப்பில் என்னோடு வந்து புகைப்பட, காணொளி எடுத்து உதவிய தோழர்கள் ஏஜாஸ் மற்றும் தமீம் அன்சாரி ஆகியோருக்கு எனது நன்றிகளையும் இதில் பகிர்ந்து கொள்கிறேன்.

தோழமையுடன்
பழனி ஷஹான்.

No comments:

Post a Comment