Thursday, 20 November 2014

மதானி உடன் சந்திப்பு - A MEET WITH AN 'ABDUL NASIR MAUDANY'



                                
                                                            புரட்சியாளர் பழனிபாபாவின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்தும் எனதும், தோழர் உமர்கயானினதும் பதினோரு மாத பயணத்தின் ஒரு பகுதியாக, கடந்த 16-10-2014 அன்று பெங்களூரு மல்லிகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவரும், ஆளும் பாசிச அதிகார வர்க்கங்களுக்கு சாட்டை அடியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழனாக களம் கண்டுவரும், மனிதநேயப் போராளி அப்துல் நாசர் மதானி (ABDUL NASIR MADANI) அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.
(அப்துல் நாசர் மதானி அவர்களோடு)

கோயம்புத்தூரில் 1996-ம் வருடம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனைக் கைதியாக கைது செய்யப்பட்ட மதானி அவர்கள், தொடர்ந்து ஒன்பதரை ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலையாகி வெளி வந்தார். விடுதலையான அவர் மீண்டும் கேரள மண்ணில் தனது ஒடுக்கப்பட்டோருக்கான போராட்ட அரசியலை துணிந்து முன்னெடுத்தார். ஒன்பதரை ஆண்டுகள் சக்கையாய் பிழிந்து எடுத்தாகிவிட்டது, கட்சியின் கட்டமைப்பும் உருக்குலைத்தாகிவிட்டது, இனி எங்கு இவர் போராடப் போகிறார் என்கிற பாசிச சக்திகளின் கண்களில் மிளகாய்ப் பொடிகளைத் தூவிய மதானியை மீண்டும் ஒரு பொய் வழக்கில் விசாரனைக் கைதியாக கது செய்தனர். அது பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்காகும்.

ஏற்க்கனவே அதிகம் உளவுத்துறையினராலும், ஏகாதியபத்தியவான்களாலும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்த மதானி, கோவை வழக்கிற்குப் பிறகு இன்னும் அதிகமாக, இருவிழி பெருக அதிகார வர்க்கங்களாலும், உளவுத்துறையினராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தார். மேலும் அவரின் வீட்டைச் சுற்றியே காவல் துறையினரும் இருந்து கொண்டுதான் இருந்தனர். அவர் செல்லும் இடங்களில் முழுக்க முழுக்க கண்கானிப்பு வளையங்களுக்குள்தான் வைக்கப்பட்டிருந்தார். இப்படி இருந்தும் மதானி பெங்களூர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டார் என ஒரு கற்பனைக்கும் எட்டாத கதையைச் சொல்லி கைது செய்து பெங்களூர் சிறையில் அடைத்தது அரசு. கிட்டத்தட்ட வெறும் விசாரனைக் கைதியாகவே அவர் இந்த வழக்கிலும் ஆறு ஆண்டுகளைக் கழித்திட்ட நிலையில், தற்போது மருத்துவ சிகிச்சைக்காகப் போராடி பரோல் பெற்றுள்ளார். இந்த நிலையில்தான் நாங்கள் எங்கள் புத்தகத்திற்க்காக அவரைச் சந்தித்தோம்.

அரை மணி நேரங்கள் அவர் எங்களோடு பேசினார். பழனிபாபாவிற்கும் தனக்குமான உறவுகள், அரசியல் தொடர்புகள், சந்திப்புகள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்ட அவருக்கு, பழனிபாபாவோடு அவர் இருக்கும் அரிய புகைப்படத்தினை நாங்கள் காண்பித்து மகிழ்ச்சியை அளித்தோம். பழைய நிகழ்வுகளை அப்படியே சிறிது, சிறிதாக பகிர்ந்து கொண்ட அவர், தான் கோவை சிறையில் இருந்த ஒன்பதரை ஆண்டுகளாத்தில் பழனிபாபா இன்னும் அதிகமாக அறிந்து கொண்டதையும், கூற மறக்கவில்லை. மேலும் இந்த கோவைச் சிறையின் எதிரொலியாக இருந்தது, அவரின் தங்கு தடையின்றிய தமிழ் மொழி உரையாடல்கள். தான் கோவையில் இருந்த காலங்களில்தான் தமிழைக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

1992-ல் பாபார் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், மதானி அவர்கள் நடத்தி வந்த ஐ.எஸ்.எஸ் (ISS) இசுலாமிய சேவக் சங் எனும் அமைப்பு அரசால் தடை விதிக்கப்பட்டது. இவர் இந்த அமைப்பு ரீதியாக இயங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் எனும் தீவிரவாத அமைப்பினரால் குண்டு வீசப்பட்டு, தாக்கப்பட்டார். இதனால் அவர் தனது ஒரு காலை இழக்க நேரிட்டது. குண்டு வீசி தனது காலினை தகர்த்தவர்களை போலீசு கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்திய போது, அப்படியான விசக் கிருமிகளைக் கூட மண்ணித்துவிட்டார் மதானி. இதுதான் மதானியின் மாந்த நேயம்.
(தோழர்.உமர்கயான் அவர்கள், மதானி அவர்களுக்கு, அவருடைய செயற்கை காலினை எடுத்து பொருத்து விடுகிறார்)


தனது இசுலாமிய சேவக் சங் அமைப்பு அரசால் தடை செய்யப்பட்டதும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரைப் போல தேசத்திற்கு ஊறு விழைவிக்காமல், அதனை அப்படியே விட்டுவிட்டு, தனது இயக்கப் பாதையை, அரசியல் சக்தியாக, கேரளத்தில் தவிர்க்க இயலாத தலைவராக உருவெடுத்தார் மதானி. மக்கள் ஜனநாயக் கட்சி (PDP - PEOPLE DEMOCRATIC PARTY) எனும் கட்சியை உருவாக்கி, இசுலாமியர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் களத்தில் நின்றார், மதானி. அதனால்தான் இன்று அவரின் கைதை கண்டித்து கேரள மாநில மக்கள் மட்டுமல்ல, கேரள அரசே தனது சட்டமன்றத்தில் மதானியை விடுதலை செய்யச் சொல்லி, தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.

கேரளத்தின் மாநில முதல்வரான, திரு.உம்மன் சாண்டி அவர்கள், மதானியை சென்று மருத்துவமனையில் நலம் விசாரித்து வருகிறார். கிருத்துவ மதக் குருக்கள் சென்று மதானியை கண்டு வருகின்றனர். கேரள தலித் தலைவர்களும், தலித் மக்களும் அவருக்கு ஆதரவாக கேரளத்தில் பேரணி நடத்துகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர், தொல்.திருமாவளவன் அவர்கள் சென்று மதானியை நேரில் பார்த்துவிட்டு, அவரின் உடல்நிலையை விசாரித்துவிட்டு, விரைவில் விடுதலை அடைய வேண்டும் என்று கூறி வந்திருக்கிறார் எனில், அதுதான் போராளி.மதானியின் பண்புக்கு எடுத்துக்காட்டு.

15-10-2014 மாலை பழனியிலிருந்து கிளம்பிய நாங்கள், மெல்ல மெல்ல இடைவெளிகளை விட்டுப் பயணித்து, அதிகாலையில் பெங்களூர் நகரை அடைந்தோம். மதானி அவர்களை சந்திக்க எண்ணிக்க இதற்கு முன்னர், 26-07-2014 அன்று பெங்களூர் சென்று, அவரைச் சந்திக்க இயலாமல், திரும்பினோம். இதற்கு முன்னர், கடந்த  ஒரு வருடமாகவே அவரை சிறையில் சென்று சந்திக்க முயற்சிகளை தோழர்.உமர்கயான் மேற்க்கொண்டு வந்தார், இந்த சமயத்தில் புத்தகத்திற்க்கான சந்திப்பும் தேவைப்பட்டதால், முயற்சிகளைத் தீவிரப் படுத்தினோம். ஒருவழியாக மதானி அவர்களைச் சந்திக்க, அவரின் வழக்கறிஞர்.பாலன் அவர்களின் மூலம் தொடர்பு கிடைத்தது. இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச் செயலாளர்.திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்களையும் எங்கள் பயணத்தோடு இணைத்துக் கொண்டோம்.
ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் முன்னரே மதானி அவர்களை வைத்து ஒரு ஆவணப்படம் எடுத்திருந்த நிலையால், மதானி அவர்களுக்கு ஆளூர் அவர்கள் முன்னரே அறிமுகமானவராக இருந்தார். இருந்தாலும் இடைப்பட்ட காலங்களில் அவருக்கு மதானி குறித்த தொடர்புகள் இல்லாமல் போயிருந்தமையால், எங்களின் முயற்சியில் மூலம் மதானியின் நேரடித் தொடர்பினை எடுத்தோம். மதானி அவர்களைச் சந்திக்க செல்லவிருக்கும் தகவல்களை முன்கூட்டியே ஷாநவாஸ் அவர்களுக்கு தெரிவித்து, அவரையும் வருமாறு அழைத்திருந்தோம், இதன் அடிப்படையில் அவரும், சென்னையில் இருந்து பெங்களூர் வந்துவிட்டார்.

மதானி அவர்களின் வழக்கறிஞர்.தோழர்.பாலன் அவர்களை நாங்கள் 16-ம் தேதி காலையில் தொடர்பு கொண்டு வந்திருக்கும், செய்தியினைத் தெரிவித்தோம், அதனைக் கேட்டுக் கொண்ட அவர், மதானி அவர்களுக்கு தொடர்பு கொண்டு விடயத்தைத் தெரிவித்திருக்கிறார். சில மணித்துளிகள் கடந்த நிலையில், பாலன் அவர்கள் தொடர்பு கொண்டு மதானி அவர்களின் தொடர்பு எண்ணை எங்களிடம் தெரிவித்தார், நாங்கள் அந்த அலைபேசி எண்ணிற்கு அழைத்து மதானி அவர்களிடன் நேரடியாகப் பேசினோம். சந்திப்புக்கான நேரம் சரிவர சொல்ல இயலாலதால், அவர் மீண்டும் பதினைந்து நிமிடம் கழித்டு அழைக்க வேண்டிக் கொண்டார். இதனையடுத்து மீண்டும் அழைத்துப் பேசிய போது, அவர் காலை 11-மணிக்கு சந்திப்பிற்கு ஒப்புக் கொண்டார்.
காலை உணவு வேளைகளை முடித்துவிட்ட நாங்கள், தங்கியிருந்த பகுதியிலிருந்து, மதானி அவர்கள் இருந்த மல்லிகை மருத்துவமனைக்கு மகிழுந்தில் பயணமானோம். இதே தருணத்தில் ஷாநவாஸ் அவர்களுக்கும் தகவல் தெரிவித்தோம், அவரும் புறப்பட்டு குறிப்பிட்டு மருத்துவமனைக்கு வந்துவிடுவதாக தெரிவித்தார். நாஙகள் மருத்துவமனைக்கு முன்பாகச் சென்று காத்திருந்தோம், ஆனால் ஷாநவாஸ் அவர்கள் வந்து சேரவில்லை. ஆனால் அதற்குள் மதானி அவர்களிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்துவிட்டது, வேறுவழியின்றி நாங்கள் மட்டும் அவரைச் சந்திக்க தயாரானோம். மருத்துவமனையின் வெளியே வந்து, எங்களை அடையாளம் கண்ட மதானி அவர்களின் மகன், எங்களை உள்ளே அழைத்துப் போய்விட்டார்.

அதன் பின்னர், நாங்கள் மதானி அவர்களோடு உரையாடத் தொடங்கினோம். முதலில் அவரின் உடல்நிலைகளைப் பற்றி முழுமையாக விசாரித்துக் கொண்ட நாங்கள், பிறகு அவரின் வழக்குகள் குறித்து விசாரித்தோம். அரசின் இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னரும் கூட ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையின் வலு எங்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது.

அரசின் பொய் வழக்குகளால், வேண்டுமென்றே திட்டமிட்டு கவிழ்க்கப்படும் சூழ்ச்சிகளால் தனது இளமை முழுமையையும் இழந்து, உடல் முழுக்க நலிவைக் கண்டும் கூட அவரின் போராட்டக் குணம் மாறிடவே இல்லை. இதுபோன்ற மன உறுதி வேறு யாருக்கும் அவ்வளவு எளிதில் அமைந்துவிடாது. இந்த நாட்டில், இன்னொருவனின் உரிமையைப் பறித்து, சுத்ந்திரத்தைப் பறித்து அதன் மூலம் ஒரு போலி தேசத்தை உருவாக்கியவரெல்லாம் இரும்பு மனிதர் என்கின்றனர். ஆனால் எங்களைப் பொறுத்துவரை மதானிதான் அதற்கு சரியான ஆளாக இருக்க முடியும். அதேபோல் தமிழகத்தில் பழனிபாபாவைக் குறிப்பிட வேண்டும்.

ஒரு அரை மணிநேரம் நீண்ட எங்கள் உரையாடலில் பல விடயங்களைப் பேசினோம், மையமாக எங்களின் புத்தகத்திற்க்கான உரையாடல் இருந்தது. கேரள அரசியல் பற்றி பேசிய அவர், தமிழக அரசியல் பற்றிம் பேசினார். "ஏன் தமிழகத்தில் தலித் தலைவர்கள், இப்படி பிரிந்து நிற்க்கிறார்கள்" என்று வருத்தத்தோடு தனது ஆதங்கத்தையும் தெரிவித்தார். அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை அதிகமாக விசாரித்துக் கொண்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் அவரின் தோல்வி குறித்தும் வருத்தங்களை வெளிப்படுத்தினார். (எங்களின் சந்திப்பிற்குப் பிறகுதான் திருமாவளவன் அவர்கள், மதானியைச் சந்தித்தார்). இறுதியாக நாங்கள் விடைபெறும் போது, புரட்சியாளர்.பழனிபாபாவின் 'வாழ்வும்-போராட்டமும்' புத்தகத்திற்க்கான மதானி அவர்களின் வாழ்த்துரையினைக் கேட்டோம், அதற்கு அவர் மறுப்புகளற்று, நிச்சயமாக எங்கிருந்தபோதும் (சிறையிலிருந்தாலும் கூட) நான் வாழ்த்துரை அளிப்பேன் என உறுதிபடத் தெரிவித்தார்.

மதானி அவர்களின் பொன்னான சந்திப்பினை, உயர்வான கலந்துரையாடல்களை முடித்துவிட்டு வெளிவந்து தேநீர் அருந்தச் சென்றோம். அப்போதும் ஷாநவாஸ் அவர்கள் வந்து சேரவில்லை. அலைபேசியில் பலமுறை முயற்ச்சித்தும் அவர் இணைப்பில் கிடைக்கவில்லை. ஒரு அரை மணி நேரம் கழிந்த நிலையில் அவரின் அழைப்பு வந்தது, அதில் அவர் அருகே வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். சரி, என நாங்கள் இன்னும் காத்து நின்றோம், இறுதியாக மதானி அவர்களைச் சந்தித்துவிட்டு நாங்கள் வெளியேறிய ஒரு மணி நேரங்கள் கழித்து அவர் அங்கு வந்தார்.

இருசக்கர வாகனத்தில் வந்ததாலும், முகவரி சரியாக புலப்படாததினாலும், வாகன இடைஞ்சல்களாலும் இவ்வளவும் தாமதம் ஆகிவிட்டதினைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் நாங்கள் அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு, மதானி மாலை வேளையில் தங்களைச் சந்திப்பதாகச் சொன்னார் எனத் தெரிவித்தோம். எங்களிடமிருந்து அவர் மதானி அவர்களின் அலைபேசி எண்ணைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். ஆளூர் ஷாநவாஸ் அவர்களோடு சென்று மதானி அவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிற எங்களின் திட்டம் நிறைவேறவில்லை. இந்தச் சந்திப்பிற்க்காகவே சென்னையில் இருந்து எங்களின் அழைப்பின் பேரில் வந்திருந்த அவருக்கு, தவிர்க்க இயலாத காரணங்களால், நேரத்திற்கு வந்து சேர இயலாமல் போனது வருத்தமாய்த்தான் இருந்தது. அதற்க்காகவே, அவர் வருகைக்காக காத்திருந்து அவரிடம் தெரிவித்துவிட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.

இதன் பின்னர், மாலை 4-மணியளவில் மதானியைச் சந்திக்க தனது குடும்பத்தோடு சென்ற ஆளூர் ஷாநவாஸ் அவர்கள், மதானி அவர்களோடு பேசிவிட்டு வெளியே வந்ததும், எங்களுக்கு தொடர்பு கொண்டு மகிழ்வாய் பேசினார். ஏற்க்கனவே ;கைதியின் கதை' என்கிற மதானி குறித்தான ஆவணப்படத்டை எடுத்தவர் என்கிற ரீதியிலும், 'அப்துல் நாசர் மதானி -அதிகாரத்தின் இரை' என்கிற தலைப்பில் சமநிலைச் சமூதாயத்தில் கட்டுரை எழுதியிருந்தமையாலும், விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச் செயலாளருமாக உள்ள நிலையால் மதானி அவர்களும் ஷாநவாஸ் அவர்கள் நன்கு பழக்கப்படுப் போன ஒருவர்தான். நானும், ஷாநவாஸ் அவர்களும் ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படத்தினை ய்தேர்ச்சையாக மதானி அவர்கள், சட்டென இது ஷாநவாஸ்தானே என கேட்டார். இதேபோல தோழர்.உமர்கயான் அவர்கள், பவானி.பா.மோகன் அவர்களின் வழக்கறிஞர் குழுமத்திலுள்ள வழக்கறிஞர் என்பதால், அவரும் மதானிக்கு அறிமுகமானவராகத்தான் இருந்தார். எளியவன் நானே மதானி அவர்களுக்கு சற்றும் அறிமுகமில்லாதவனாக இருந்திருந்தேன்.
             (ஆளூர் ஷாநவாஸ் மற்றும் சமநிலைச் சமுதாயம்                                                பத்திரிக்கையின் ஆசிரியர் ஜாபர் பாக்கவி அவர்களுடன் நான்)

மதானி அவர்களைச் சந்தித்துவிட்டு, வெளியே வந்ததும் அண்ணன்.ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எனக்கு அழைத்துப் பேசிய போது, மதானி அவர்கள் என்னைக் குறித்து விசாரித்ததினையும், பாராட்டியதையும் தெரிவித்தார். மேலும் சிறுவயதில் ஆளூர் அவர்களைப் பார்த்ததைப் போலவே நான் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது எனக்குள் நீங்காத மகிழ்வை இன்னும் தந்து கொண்டேதான் உள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, மதானி அவர்களின் உரையாடல்களை நாங்கள் முழுமையாக காணொளியாகப் பதிவு செய்தோம். இதேபோக ஆளூர் அவர்களும் மதானி அவர்களுடனான பேட்டியினை முழுமையாக ஆவணப்படுத்திவிட்டு வந்தார். நாங்கள் ஊர் திரும்பிய மறுநாள், நான் ஆளூர் அவர்களுக்கு அழைத்துக் கேட்க்கையில் அவர் இன்னும் பெங்களூரில்தான் இருப்பதாகச் சொன்னார். மேலதிகமாக, ஜீனியர் விகடனிலிருந்து (பத்திரிக்கை) வருவதாக, அவரிடம் அழைத்துப் பேசியுள்ளனர். அவர் அங்கு சென்றிருப்பதினை அறிந்து கொண்ட ஜீனியர் விகடன் நிருபர், உடனே அவரைத் தொடர்பு கொண்டு, மதானியை சந்திக்க வேண்டிய்ள்ளார். அதுசமயம் ஆளூர் அவர்களும் அவர்களுக்காக ஒருநாள் சேர்த்து இருந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். மதானி அவர்கள் சிறைவாசி என்பதால் அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்க இயலாது. இதனால் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எடுத்திருந்து தனிப்பட்ட பேட்டியினை அப்படியே தொகுத்து கேட்டுள்ளது ஜீனியர் விகடன். 09-11-2014 அன்று பிரசுரமாகிய ஜீனியர் விகடனில், மதானி பற்றிய ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேட்ட்டி வெளியாகியிருந்தது. இதன் தாக்கமே தற்போது மதானி அவர்களின் வழக்கை 4-மாதங்களுக்குள் விரைந்து முடிக்கவும், வழக்கு முடியும் வரை அவர் மருத்துவமனையிலேயே இருக்கவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட வழி வகுத்துள்ளது என்கிற இன்னும் கூடுதல் மகிழ்ச்சிதான்.

விரைவில் புரட்சியாளர் பழனிபாபா, அவர்களின் வரலாற்று நூல், புரட்சியாளர்.மதானி அவர்களின் வாழ்த்துரையோடு வெளிவரும்.

தோழமையுடன்
பழனி ஷஹான்




No comments:

Post a Comment