Sunday, 21 July 2013

சாதியம் ஓர் நடமாடும் சவக்குழி



நஞ்சை விரும்பி உண்போர்
நம்மில் எவருமுண்டோ ?
இருந்தும் ஏனோ
சாதியைக் கைவிட மறுக்கின்றோம்

எங்கிருந்தோ வந்தான்
புகலிடம் ஒன்று பெறுவதற்காக
பூஜை புனஸ்காரம் என்று
நம்மை குழப்பியும், கூட்டங்களாய் பிரித்தும்
நம் வீட்டு கூரையில் ஏறி
தான்தான் உயர்ந்தவன் என்றான்

இவன் சதி
வெகுநாள் வெல்லாது என்பதாலே
சாதி எனும் சவக்குழியினை
நாம் அறியா வண்ணம்
நம் மத்தியிலே உண்டுபண்ணிவிட்டான்

அய்யோ இந்துக்களுக்கு ஆபத்து என்றார்
இராமகோபாலய்யர்
அய்யஹோ ! வன்னிய குல மங்கைகள்
மயக்கப்படுகிறார்கள் என்கிறார்
இராமதாஸ்

இந்த இரு கூப்பாட்டிலும் உள்ள
பொது விதி என்ன தெரியுமா ?

தலித்தும், தாழ்த்தப்பட்டவனும்
தரணியில்
வாழ்ந்து விடக் கூடாதென்பதற்கானது அல்ல
தரணி ஆண்டு விடக் கூடாதென்பதற்கானது !

புரட்சிக் கவி பாரதியும்
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரும்
வாழ்ந்து மறைந்த
இப்புகழ் தமிழ் மண்ணில்தான்
வாழ்ந்தானா இளவரசன் ?

காதல் எங்குள்ளதோ
அங்குதான் வாழ்க்கை உண்டென கூறிய
காந்தியார் வாழ்ந்த நாட்டில்தான்
காவு கொடுக்கப்பட்டானா இளவரசன் ?

அன்பையும், சமத்துவத்தையும்
தங்களின் இறுதி மூச்சு வரை போதித்த
புத்தரும், இயேசுவும், முகம்மதுவும்
உதித்திட்ட இந்த உலகத்தில்தான்
உயிரை விட்டானா இளவரசன் ?

ஆம்
அவன் இந்த மண்ணில்தான் வாழ்ந்தான்
அவன் இந்த நாட்டில்தான் காவு கொடுக்கப்பட்டான்
அவன் இந்த உலகத்தில்தான் உயிரை விட்டான்

உயிராய் ஒருவளை நேசித்து
அன்பின் அகிலமாய் அவளை பாவித்து
இதயப் பரிசளிப்பான காதலை
அவள் மீது கொண்டதனால்

அவளொன்றும் சளைத்தவளில்லை அவனுக்கு
தன் குலமும் பின் குடும்பமும் எதிர்த்தும்
தன் தந்தை இறந்தது தெரிந்தும்
துணிவோடு துணையவனோடு
திருமணம் புரிந்து வாழ்ந்தவளவள்

இந்த அன்பு கலப்பிற்கு ஆரம்பத்திலே
எதிர்த்து நின்றிட்ட சாதி வடிவச் சாத்தான்
சக்திகளற்று தோற்றுவிட்டான்
சத்திய காதலின் முன்பு

நேரெதிர் நின்று தோற்ற சாதிச் சாத்தான்
பற்பல சூழ்ச்சிகளைத் தொடர்ந்து
பாவையவள் உள்ளத்தை திரித்து
காளையவனை தனிக்க வைத்து விட்டான்

தனித்து நின்றிட்ட
நிழல் இழந்த காளையனை
கயவர்கள் பாசக் கயிற்றால் வேட்டையாடி
கல்லறைக்கு அனுப்பிவிட்டனர்

மண்ணறைக்குள் மறைந்துவிட்டவன்
நமக்கோர் மதி நுட்பத்தை
மாயமாய் கூறிவிட்டிருக்கிறான்

சாதியக் காட்டேரியை
தனியொருவனாய் எதிர்த்து
இத்துனை நாட்கள் போரிட முடியுமெனும்போது
நம்மில் பலர் கூட்டாய் குரல் கொடுத்தால்
என்ன நேரிடும் ?

தெளிவு பெற்ற இரு ஆடுகளுக்கிடையில்
மாட்டிக் கொண்ட நரியினைப்
போலல்லவா
ஆகிவிட மாட்டார்கள்
சாதியம் வளர்த்திடும் அயோக்கியர்கள் ?

சாதிய சங்கங்களின் கதவுகளுக்கு
பூட்டிடாத வரையில்
நீ புண்பட்டுக் கொண்டுதான்
இருப்பாய்

உன் கையில் சாதியக் கொடியினை தந்திடும்
தலைவர்களின் கரங்களுக்கு
விலங்கிடாத வரையில்
நீ விளையாடப்பட்டுக் கொண்டுதான் இருப்பாய்

சத்ரியன், சூத்திரன் எனும் இழிசொல்லை
வர்ணாஸ்சிரம சட்டத்தால் உருவாக்கிட்ட
வந்தேறிகளை தனிமைப்படுத்தி
விரட்டியடிக்கா வரையில்
நிச்சயம் நமக்கிங்கு விடியல் இல்லை

கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்
மந்திரம் பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டது
எனக் கூறி
பயமுறுத்திடும் விஷப் பாம்புகளுக்கு

கடவுள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்
அன்பு அநீதிக்குள்ளாக்கப்பட்டோர்க்கும்
ஏழைகளுக்கும், அபழைகளுக்கும் கட்டுப்பட்டது என
புரிய வைத்திடு நீ

எப்படியெனில்
அவ்விஷப் பாம்புகளுக்கு
விளங்க வைப்பது
எப்படியெனில்

உன் கடவுளை நீ தரிசிக்க
நீ வழிபட
இடைத்தரகராய் எவனும் தேவையில்லையென
அவனை உதறித் தள்ளி,

அகிலம் படைத்த கடவுள்
அனைத்து மொழியும் அறிந்தவரென
அவனுக்கு
பார்ப்பனன் அவனுக்கு அறிவுறுத்தி
விளங்க வைத்திடு

சாதியத்திற்கு வழி வகுக்கும்
கொடிய பல கடவுள்களையும்
மிருக மனிதர்களையும்
ஒன்றாய் சேர்த்து தள்ளிவிடு
அவர்களாகவே தயாரித்த சாதியெனும்
நடமாடும் ஓர் சவக்குழிக்குள்ளே

அந்த இளவரசனின்
கல்லறை மேல் ஓர்
வெள்ளை மலரைத் தூவி
சத்தியம் ஏற்ப்போம்

அன்புக் கலப்பில் உள்ளங்களை
அதிகமதிகம் இணைத்துக் கொண்டு
ஆயிரம் ஆயிரம் ஆன்மாக்களை
உருவாக்கிடுவோம்
சாதியம் அழித்து
ஓர் புது இனம் படைப்போம்
புனிதக் கருத்தரித்தல்கள் மூலம்…!


(இளவரசனைக் கொன்றது சாதியா ? காதலா ? எனும் தலைப்பில் திருப்பூர் பதியம் நடத்திய பாவரங்கத்தில் இடம்பெற்ற எனது கவிதை இது)


தோழமையுடன்
- பழனி ஷஹான் 



Saturday, 29 June 2013

காஷ்மீரி நாத்திகன்



காஷ்மீரத்திலிருந்து பேசுகின்றேன்
காயங்கள் அது
நாளும் பலபெற்ற
நாத்திகன் நான்..!

மதம் மறுக்கும்
நாத்திகன் அல்ல - நான்
தேசம் மறுக்கும் நாத்திகன் !

இந்தியனா? நீ பாகிஸ்தானியா?
எனக் கொக்கரிப்போடு கேள்விதொடுத்து
எள்ளலிடும் குரல்களே - நான் 
இவ்விரண்டுமற்ற காஷ்மீரி நாத்திகன்!

என்னை
எங்களின் இம்மண்ணை
கூறுபோட சண்டையிடும்
அண்டை நாடுகளே
உங்கள் மத்தியில்
தேசத்தால் நான் நாத்திகனே!

என் வீட்டைப் பராமரிக்க
நானிருக்கும்போது
நீங்கள் எதற்கு?

உரிமைகளைவேண்டி
வாழ்விழந்து உயிர் துறக்கும்
எங்களைத் தீவிரவாதிகளென்றும்
தேசவிரோதிகளென்றும்
சிறுமைப்படுத்துவோரே

இதையெல்லாம்
எங்கள் நிலத்தை அபகரித்து
எம் மக்களைக் கொன்றொழித்து
எங்கள் பெண்களை 
ஆயுத முனையில் வன்புணர்ந்தபடியே 
சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்


எங்கோ சிலர் வாழ
நித்தம் நித்தம் மடிகின்றோம் 
பற்பலராய் இங்கு….

மடிவோரில்
ஆணென்றும், பெண்ணென்றும்
கணக்கில்லை

மழலையென்றோ! அபழையென்றோ!
பாகுபாடுகள் அது
இங்கு இல்லவே இல்லை!

பனிமலைகளில் வெண்மை இல்லை
அவையாவும்
வழிந்தோடுகின்றன
செந்நிறக் குருதி ஆறுகளாய்!

என் அண்டை தேசங்களே
ஆங்கிலேயனிடம்
அடிமையாய் கிடந்தது நீங்கள் மட்டுமா
என் பூமியும்தானே இருந்தது !

அவனிலிருந்து
விடுதலைவேண்டி போரிட்டது
நீங்கள் மட்டுமா, நாங்களும்தானே?

இன்று நீங்கள் மட்டும்
சுதந்திர தாகத்தைத் தனித்துக்கொண்டு
எம்மண்ணை
அடிமைப்படுத்துகிறீர்களே
இதென்ன நியாயமோ?

நாங்கள்
ஒவ்வொரு நொடியும்
வாழ்வதற்காவே வீழ்கின்றோம்
எம் தாய் பூமியிலேயே!

ஆங்கிலேயன் அடிமைப்படுத்திய
காலத்தில்கூட எம்மண்ணது
இப்படி இருந்ததில்லை!

வலியோடும், வேதனைகளோடும்
சொல்லுகிறேன்
ஜனநாயகப் போர்வையில்
எங்கள்மீது சர்வாதிகார
வலைவீசும் நாடுகளே!
உங்களிலிருந்துபெறும் விடுதலையே
எங்களுக்குப் பூரணச் சுதந்திரம்

அங்கணமே மாறிடும் 
என் பூமி - அது
புன்னகை தேசமாய் !


தோழமையுடன்
பழனி ஷஹான் 

Friday, 31 May 2013

அழியா அனல் காடு – ‘சே’

 




“சே”
மரணித்த ஒருவனின்
மரணிக்காத ஓர் வடிவம்….

மனிதருள் மடிந்திட்ட
உரிமைக் கனலை, வல்லுணர்வை
மீளச்செய்த
ஓர் ஒற்றை எழுத்து !

புரட்சி எனும் மொழியை
பாரில் பலரை
பேச வைத்த எழுத்து

ஏட்டளவிலும் அகற்றிடு
ஏகாதிபத்தியத்தை
என்று
எல்லோரையும் முழங்க வைத்த எழுத்து !

அடிமைத்தனம்
எங்கு சூழ்ந்திடினும்
எதிர்த்து நின்றிடுவென
எளியோனையும் கூற வைத்திட்ட
கடலலைச் சீற்றம் !

எதேச்சதிகாரத்தின்
ஆணி வேரை உலுக்கி
பிடுங்கிய
உக்கிர எழுத்து

உலகம் முழுமைக்குமான விடுதலை
என்று உறுமி
அடிமை உள்ளங்களில் யாவும்
ஊக்கம் தந்திட்ட ஊன்று கோல்,

துணிவின் சுருக்கம் !

புரட்சி எனும் கொடி
ஏந்திய
யாவருக்கும் முகவரி
இந்த ஒற்றை எழுத்து !

அடக்குமுறையின்
அடிச்சுவடையே
அடங்க வைத்த அபாய ஒலி !

கொடுங்கோலனின்
கோட்டைக்குள் நுழைந்து
சொடுக்கிட்டு எச்சரித்த
தீப்பிழம்பு !

தோட்டாக்களை தோலுயர்த்தி
எதிர்த்து நின்ற
வீரத்தின் அகராதி !

வலைக்குள் சிக்குண்ட போதும்
அலட்டு சிரிப்பை உதிர்த்திட்ட
அஞ்சாமை !

பீரங்கிப் படையை
தெரித்தோடச் செய்த
தீரம் நிறைந்த செந்நிற
கூர் பார்வை கொண்ட
எரிகழல் மாந்தனின் முதன்மை
எழுத்து !

ஆர்ப்பரிக்கும் அகோரச் சின்னம் “சே”
என்றும்
அழியாத அனல் காடு !




 
தோழமையுடன்
பழனி ஷஹான்





.

Sunday, 12 May 2013

இடிந்தகரையில் ஒரு நாள்


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடும், போராளி அண்ணன் சு.ப.உதயக்குமார் அவர்களை இடிந்தகரையில் சந்தித்து உரையாடினோம். இடிந்தகரை மக்களின் நிலை, அவர்தம் வாழ்வியல், கல்வி, போராட்ட யுக்திகள், அம்மக்களின் மனநிலை போன்றவற்றை குறித்து அறிந்து கொள்வதற்காக, கடந்த ஏப்ரல் 7 அன்று அங்கு சென்றிருந்தோம்.
அரச பயங்கரவாதத்தை, அடக்குமுறையை முதன் முறையாக நேரில் கண்டு வந்துள்ளேன். அவர்களின் தொடர் போராட்டத்தின் 601-வது நாளில் நாங்கள் சென்று, அந்த ஒரு நாள் அவர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு வந்தோம்.

உதயகுமார் வெளிநாட்டு பணம் வாங்குகிறார், வீணாக மக்களை மூலை சலவை செய்து மக்கள் நலனை முடக்குகின்றார் என்பன போன்ற இன்னும் சில அவதூறுகளுக்கு அவரிடமே கேள்விகள் கேட்டு விடை கண்ட பொழுது, பத்திரிக்கைகள் எந்த அளவு இந்த போராட்டத்தை நசுக்க முனைகின்றது என்பது தெளிவாகியது. உண்மையில் மக்கள் நலனுக்காக போராடும் இடிந்தகரைவாசிகளின் தியாகங்கள், அரசு பயங்கரவாதத்தாலும், பத்திரிக்கையின் பாசாங்குகளாலும் திரை மறைவு செய்யப்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் மிகப் பெரும் அவலம்..!


- பழனி ஷஹான்


Friday, 3 May 2013

ஒரு நிமிடம்




வீழ்ந்து விடாதே !
விடியல் கிட்டும் சோர்வு கொள்ளாதே!

எழுந்து நின்றிடு !
ஏணிப்படிகள் காத்திருக்கின்றன தாழ்வு கொள்ளாதே !

ஒரு நாள் வரும்
உன் முகவரி உலகறிய
அதற்க்காவேனும் தோழா
ஒரு நிமிடம் !

ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய் !

உன்னை வாசிக்க
ஓர் உலகம் உண்டு
அதற்க்காவே
நீ சுவாசிக்க வேண்டும் சோதனைகளை
முயற்சிகள் பல கொண்டு !

வெற்றிகள் உண்டு உன்னில்
வெற்றுக் காகிதமாய் !
அதை நிரப்பிடு தோழனே
தன்னம்பிக்கை எனும் பேனாவில்
முயற்சி எனும் மை ஊற்றி !

இலட்சியம் கைகொள்ள ஆவலுண்டு
சாதனையை வென்றெடுக்க முயற்சிகளுண்டு
பின் ஏன் இன்னும் அச்சம்
அதில் முந்தியவர்களை கண்டு !

அவ மதிப்புகளால்
மனத் தாழ்வுக்குள் அகப்படாதே
நீ தழைத்தோங்க
உன்னை தாங்கப் போகும்
ஆணி வேர்கள் அவை !

பாறைகள் பல கடந்து
இடறுகள் பல தாண்டி
இரவு பகல் பற்பல கழித்து
பெரும் நெடிய பயணம் மேற்க்கொண்டே
நதிகள் வெல்லுகின்றன
கடலாய் மாறி !

சிற்சிறு கற்களும்
பொடி பொடி மண் துகள்களும்
மெல்ல மெல்ல சேர்புகள் கொண்டே
உயர்ந்து நிற்கின்றன மலைத் தொடர்களாய் !

செய்வதற்க்கு ஏதுமில்லையென
வெறுமை ஏமாப்பு கொள்ளாதே !
ஏதேனும் செய்திடு
வெற்றாய் கழிந்திடும் காலத்திற்க்கு
விருந்தளித்திடு
அது உனக்கு பரிசளித்திடும் !

பெரும் புத்தகத்திற்க்கு தொடக்கம்
சிறு பொட்டு மை துளிகளே !
பெரும் சாதனைகளின் தொடக்கம்
தடுமாறி விழுவதிலேயே !

தடுமாறி தடுமாறி விழுந்திடு
ஆனால் தடம் மாறி மட்டும் எழுந்திடாதே !

வழிகள் இல்லையென கவலைகள்
களைந்திடு
நீ சென்றால் அதுவே மாறும்
பாதைகளாய் !

தோழா !
ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய் !
ஒவ்வொரு நிமிடமும் உருமாறும்
நாளைய சாதனைக் களமாய் !

(தூது ஆன்லைன் இணைய தளத்தில் வெளியான எனது படைப்பு)

- பழனி ஷஹான் 

Wednesday, 10 April 2013

என்னை விடுவியுங்கள்




என்னை விடுவியுங்கள்
செய்யாத தவறுக்குத்
கூண்டுப்பறவையான என்னை
இந்த சிறு அறையில் பிணைந்திருக்கும்
இந்த முள் சங்கிலியிலிருந்து….


இந்த திகிலூட்டும் சிறையில்
பல குரல்களின் அருவி இல்லை
அவை நிறுத்தாமல் பேசும்
பறவைகளின் கீச்சொலி இல்லை
பொங்கி எழும் சிரிப்பொலியும் இல்லை
தாலாட்டின் இனிய ஒலியோ
இல்லவே இல்லை……

மார்பிலிருந்து குழந்தைகள் பிய்த்தெடுக்கப்பட்ட
அன்னையரின் அழுகையொலி
கணவரை பிரிந்த பெண்கள்
விதவைகளின் ஒப்பாரி பாடல்
பசுந்தழை நிறச் சீருடை அணிந்த இளைநர்கள்
தங்கள் கைகளால் எழுதியவை……

எரியும் பந்தைக் காண்கின்றேன் நான்
பரிசோதிக்கும் முயற்சியில்
ஈடுபட்ட அறிவு
தன்னை ஒரு பெருங் காட்சியாய்
காட்டிக்கொண்ட பின் வரும்
பாடழிவின் பயங்கர முகம் அது……….

செம்மாந்து போயினர் அவர்கள்
இன்பத்தைச் சுகிக்கும் அடிமைகள்
போதையில் கிறங்கியவர்கள்
உற்சாகக் கேளிக்கையில் மிதக்கையில்
அடிபணிந்துபோய்

மனதையையும் அறிவையும்
அவை இதழ் பிரியும் முன்னே இழந்தவர்கள்
அவர்கள் செல்வம் கெளரவம் இரண்டையும்
கால அலை வீச்சு
ஏழு உயர்மலைகளுக்கு அப்பால்
அடித்துச் சென்றாகிவிட்டது…….

வெகுதூரம் உள்ள மற்றவர்களுக்கு
இது ஒரு வரம்
பேடி ஆத்மாக்கள்
செயலற்றுப்போய்ப் பார்த்தபடி நின்றபோது
குதூகலத்துடன்
அறுவடை செய்கிறார்கள் விளைச்சலை……

இருளில் ஒளிரும் விளக்கைப் போல
வெகுசீக்கிரம் கழிந்துவிடும்
அரிய வாழ்க்கை இது
மரணமில்லா மரம் ஒன்றை நட
சாவா மருந்தை விதைக்க
என்னை அனுமதியுங்கள்…….

ஒரு பறவையைப் போல
அகிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து
வாழ்வு சாவை எதிர்கொள்ளும் சந்திப்பை எட்டி
மானுடத்தின் கானத்தை பாடவிடுங்கள்……


என்னை விடுவியுங்கள்
முள் சங்கிலியை அகற்றுங்கள்
தவறாக நினைக்காதீர்கள்
ஒரு கூண்டு பறவையின்
ஆசை இது ஒன்று மட்டும் தான் ...!

-    இரோம் ஷர்மிளா


நூல் : அமைதியின் நறுமணம்






Tuesday, 26 March 2013

கீர்த்திமிகு கீரனூர் (பழனி கீரனூர்)



பூட்டு நகரமாம் திண்டுக்கல் மாநகரம். இம்மாநகரை மாவட்டமாய் கொண்ட பகுதிக்குள் அடங்கி இருக்கிறது பார் புகழும் பழங்களின் நகரமான பழனி நகர். பஞ்சாமிர்தத்தின் பிறப்பிடமான இப்பழனி நகரிலிருந்து சற்று தள்ளி அமைந்துள்ளதுதான் எனது பிறப்பிடமான கீரனூர். 

நூறு வருடங்களைத் தொட்டு நிற்கும் எனதூரின் பழமை முகவரியான பள்ளிவாசலும் (மசூதி), இந்த மசூதியின் அருகிலேயே அமைந்திருக்கும் மாரியம்மன் கோயிலும், ஊரில் உள்ள ஒற்றை தேவாலயமும், எங்கள் ஊரின் அடையாளமாய் இசுலாமிய ஆன்மீகத் தளத்தில் நன்கு அறியப்பட்ட கீரனூரி என சிறப்பாய் அழைக்கப்படும் மெளலானா.கலீல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் இல்லமும், நான் படித்த முஸ்லீம் தொடக்கப்பள்ளி, அரசினர் மேல்நிலைப் பள்ளி, மேலும் பெண்களுக்கான அரசுப் பள்ளி, ஊரின் தொன்மையில் ஒன்றான சத்திரம் உள்ளிட்டவைகளின் புகைப்படத் தொகுப்பை பல நினைவுகளுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


















- பழனி ஷஹான் 



Thursday, 14 March 2013

நிழலின் நிழலில் ஒதுங்கிய நாட்கள்



என் வாழ்வில் ஒரு வித்தியாசமான, மேலும் நெகிழ்வான அனுபவ பயணம் இது.
இன்றைய காலகட்டத்தில், வலையுலகப் பயன்பாடு தவிர்க்க இயலாலது அதில் குறிப்பாக முக-நூல் பயண்பாடாகும். அப்படியாக நான் நிழல் மற்றும் பதியம் இணைந்து நடத்தும் குறும்பட பயிற்சிப் பட்டறை எனும் விளம்பர அறிவிப்பை என்னுடைய முக-நூல் முகப்பில் கண்டேன்.

இதற்க்காக நான், என் ஊரிலிருந்து கிளம்பி, கோவை செட்டிபாளையத்தில் உள்ள, சி.டி.ஃபவுண்டேஷனுக்கு 23-02-2013 சனிக்கிழமை அன்று சென்றேன். திரைப்படங்கள் என்ற ஒன்றை அற்றாக வெறுத்து ஒதுங்கியே வாழ்ந்தவன் நான், ஆனால் இன்று நானே ஒரு திரைத்துறை சார் நபராக மாற தூண்டியது சமூக பிரச்சனைகள் தான். அதற்க்காக நான் ஆவணப்படங்கள் இயக்க வேண்டும் என்று துடித்து கொண்டு இருந்த போது தான் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. நல்ல கருத்துக்களை ஏனோ தமிழ் சினிமாவும், அநேகமாக உலக சினிமாக்களும் மறந்தே விட்டன அதன் விழைவே இன்று சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளின் பிரதிபலிப்பு. இன்னும் கூற வேண்டுமெனில் மக்கள் சினிமாவை சினிமாவாக பார்ப்பதில்லை, அதில் வரும் நடிகர்களை மனிதர்களாக பாராமல், ஒரு விஷித்திர மன நிலையை அவர்களிடத்தில் மக்கள் பாவிக்கின்றனர் அதன் விழைவே தமிழகத்தில் 5-முதலமைச்சர்களை இந்த சினிமாத் துறை உருவாக்கியுள்ளது. இன்னும் அவர்கள் தங்களின் தொழிலை ஆட்சி முறையிலும் தொடர்வதால் சமூக பேரழிவுகள் காட்டுத் தீயாய்.
அதனால்தான் நான் இந்த துறை மீது ஆர்வம் கொண்டுள்ளேன். மக்கள் இன்று என்னதான் பேசினாலும், எழுதினாலும் கவரப்படுவதில்லை. ஆனால் அதனை காட்சி படுத்தும் போது ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால் தான் நான் பக்கம் பக்கமாக ஒரு கட்டுரையோ, நூலோ எழுதுவதை விட இந்த காட்சி ஊடகம் சிறந்தது என்று இதனை தெரிவி செய்தேன். அதுமட்டுமல்லாமல் உலகம் இன்று உள்ள சூழலில் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள அதிகம் ஈடுபாடு கொள்வது இல்லை, அதனால் வாசிப்பு மிகக் குறைவு ஆக இதனை நிவர்த்தி செய்ய காட்சி ஊடகம் ஒரு நல்ல தளம். இதனால் நாம் வெகுஜன மக்களின் நேரங்களை சேமித்து கொடுக்கலாம். ஒரு புத்தக வாசிப்புக்கான நேரத்தைவிட, காட்சி சினிமாவின் நேரம் குறைவு அதே சமயம் தாக்கம் அதிகம். அதனால்தான் நான் சினிமாத் துறையை தேர்வு செய்தேன் சமூகப் பணிக்காக.
அப்படிப்பட்ட ஒன்றிற்க்காக நான் முதல் பயணத்தை நிழலோடு தொடங்கினேன். அந்த பயணத்தின் பனித்துளிகளில் சில இங்கு பகிர்கின்றேன்.


வீட்டை விட்டு பிரியும் ஒரு ஏக்கம் ஏற்கனவே இருக்க, பயிற்சிக்கான இடம் கண்டதும் இன்னும் ஒருவித மன குழப்பமும், சோர்வும் ஏற்ப்பட்டன.
இதை தாண்டி உள்ளே சென்றதும், அங்கு அறிமுகம் இல்லாத நிலையில், ஒருவர் என்னை, “தம்பி என்ன குறும்பட பயிற்சி பட்டறையா என் வினவ நானும் ஆம் என்று தலையசைத்து அவரிடம் சென்றேன். உடனே அவர் அதற்க்கான விண்ணப்பத்தை கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார், பின் பயிற்சிக்கான கட்டணமும் கேட்டு வசூலித்து கொண்டு, பெரிய ஒரு வராந்தாவுக்குள் போக சொல்ல நானும் நகர்ந்தேன், உடனே அவர் யாரு என்னன்னே தெரியாம நான் கேட்டதும் பணம் கொடுத்துட்டப்பா அப்படினதும், விழி புருவம் உயர்ந்துவிட்டது எனக்கு. பின் சற்று நேரத்தில் முகம் சிரித்தவறாக தம்பி சும்மா சொன்னேன்பா உள்ள போ வகுப்பு நடந்துட்டு இருக்குனு சொல்லி அனுப்பினார். அவர்தான் தாஸ் அண்ணா, நிழல் பட்டறை சார்ந்தவர். நல்ல ஒரு வேடிக்கையான நபர். எதிலும் சிரிப்பும், நக்கலும் நிறைந்தவர். நட்புணர்வோடு பழகக் கூடியவர்.
அடுத்ததாக, ஐயா திருநாகவுக்கரசு, இவர்தான் நிழல் இயக்கத்தின் தூண். இவரைப் பல யூ-டியூப் வீடியோக்களில் பார்த்திருக்கேன் ரொம்ப வயசானவர் போல தோற்றமும், எண்ணமும் தான் எனக்குள் இருந்தது அவரைப்பற்றி. மேலும் ஒரு சமூதாய உணர்வோடு உள்ள நபர் என்றும் இவ்வளவுதான். ஆனால் அவரின் தோற்றம் நேரில் ஒரு நடுத்தர வயதுடைய அதாவது 35 வயது போல் தான் இருந்தது. எல்லரிடமும் சகஜமாக பழகினார், பேசினார். நான் இந்த பயிற்சிபட்டறை விவரம் கேட்டது இவருடன்தான் என்று எனக்கு தெரியாது, பின்பு தான் அறிந்தேன் அந்த தொடர்பு எண் இவருடையது தான் என்று. இதை ஏன் குறிப்பிடுகின்றேன் எனில், அவர் என்னை ஸார் ஸார் என்றுதான் அழைத்தார், நான் கல்லூரி மாணவன் என்று முன்னரே கூறியும் கூட. மேலும் எல்லாவற்றையும் விட, அவரின் ப்ளஸ் பாயிண்ட் அவருடைய பொறுமை கலந்த சிரிப்புதான், எல்லா விஷயத்திற்க்கும். என் மனதில் ஒன்று நினைத்துக் கொண்டே போனேன், வருவதற்க்குள் எப்படியாது, திருநாவுக்கரசு ஸார் கூட ஒரு போட்டோ எடுக்கனும்னு, ஆனா அங்க போயி போக போக அது தேவையில்லாம போயிடுச்சு, அந்த அளவுக்கு சகஜமா இருந்தார். பின் எதற்க்கு அது.

முதல் நாள் வருத்தமாக இருந்த என் உள்ளம், மறுநாள், சுரேஷ்வரன் அவர்களின் நடிப்பு வகுப்பில் ஒரு இணக்கத்தை உடன் இருந்த சக தோழர்களிடம் கொடுத்தது. அந்த அளவிற்க்கான நெருக்கம் உருவானது இரண்டாவது நாளிலே. பின் அது பிடிச்சுப் போனது.
அடுத்த நாள் ஒப்பனை வகுப்பு எடுத்த, ரகுமான் அண்ணன் சொல்லவே வேண்டாம் ரொம்ப அருமை. இறுதி நாள் வரை இருந்து அவரும் ஒரு மாணவரைப் போன்றே எங்களோடு சுற்றித் திரிந்தார். மேலும் எங்களுக்கு ஒப்பனை வகுப்பு எடுக்க வந்தவர் போக போக, எடிட்டிங், பாடல், பின்னனி, கேமர என தன் திரைதுறை தொழில் நுட்பம் ஒவ்வொன்றையும் காட்டினார். இன்னும் 4 குறும்படங்களை இயக்ககியும் உள்ளார். 135மணி நேரம் இடைவிடாமல் பாடி உலக சாதனையும் படைத்துள்ளார்.

இதன்பின், கேமரா வகுப்பு எடுத்த, ஐயா. பன்இறை அவர்களின் வகுப்பு ஒரு தித்திப்பு. காரணம் அவர் வகுப்பு என்பதை விட, அவர் மாலை நேரத்தில் எங்களுக்கு எடுத்து காண்பித்த சந்திரனின் புகைப்படம். அதில் நான் லயித்துப் போனேன்.
இன்னும் திரைக்கதை வகுப்பு எடுத்த இயக்குநர், திரு.பாலு மணிவண்ணன் அவர்களால் முதல் முறையாக கவிதை, கட்டுரை மட்டுமே எழுதியா நான் கதை எழுதினேன்.
பின், இயக்குநர், திரு. கமலக் கண்ணனின் வகுப்பு ஒரு நல்ல செய்தி கொடுத்தது. சினிமா என்றாலே சென்னைதான் என்ற மனோபாவத்திலிருந்து, மீட்டெடுத்தது அவரின் வகுப்பு.
இதன்பின்பு எல்லோரும் அவரவர் குறும்பட இயக்கத்திற்க்காக ஒருவித போட்டி மனப்-பான்மையோடு பரவலாக, பரபரப்பாக செயல் பட்டோம். இதில் எங்கள் குறும்பட உதவிக்காக வந்த அருண் ஸார், ரொம்ப ஆக்டிவ். சுறுசுறுபோடு செயல்பட்டு எங்களையும் சுறுசுறுப்பாக்கினார். அதனால்தான் இருந்த அத்தனை அணிகளை காட்டிலும் நாங்கள் முதலாவதாக முடித்தோம்.
 மேலும் கேமரா மேன் ராம் அண்ணா, நல்ல ஒத்துழைப்பு இரவு முழுவதும் கண் முழித்து விடிய விடிய எங்களுடன் உதவி புரிந்தார். ஒரு ஷாட் மட்டும் 1;30 மணி நேரம் எடுத்தும் மிகப் பொறுமை காத்தவர்.
இப்படியாக கடைசி நாள் வரை ஒருவித அறிமுக நட்பிலே கடந்த நட்பு வட்டாரம், இறுதி நாளன்று, இதயம் கலந்த ஒன்றாய் ஆனது. அனைவரின் அன்பு ஆரத்தழுவல்களின் வடு இப்பொழுதும் கூட என்னுள்.
இதில் குறிப்பாக ஒருவரை சொல்ல மறந்துவிட்டேன், அவர் சப்ளையராகவும், எடிட்டராகவும், ஆப்ரேட்டராகவும் மாறி மாறி ஓடிய, நிழல் ஐயா அவர்களின் சின்ன தளபதி, தோழர். விஜய். சாப்பாட்டில் மிகக் கனிசமான கவனிப்பு. மனமார சொல்கின்றேன் விருந்தினர் வீட்டில் கூட இல்லாத விருந்தோம்பல் நிழலுடனான் நாட்களில் அனுபவித்தேன்.

மேலும், பதியம், பாரதி வாஸன் அவர்கள், முக-நூலில் கொண்ட நட்பு, பார்த்த முகம். ஒன்றுதான் நினைப்பேன் காமெடி ஆள் போலனு. ஆன நேரில பார்க்கறப்போ இவருக்கு இப்படி ஒரு நெட்வொர்க் இருக்கானு, மனதுக்குள் ஒரு குட்டு.

இன்னும் எத்தனையோ சின்ன சின்ன நிகழ்வுகள் நிறைய உள்ளன, இந்த 144 மணி நேர பயணத்தில். அவைகள் என்றும் மறக்காத நினைவலைகள்.
நான் போனது ஒரு ஆவணப்படம் எடுப்பதற்க்கான பயிற்சிக்கு, ஆனால் கற்றதோ ஒரு திரைப்படம் எடுக்கும் அறிவை.

நிறைவாக, இதில் நான் சொல்ல வந்த பலவும் வார்த்தைகளின் கோர்வையின்மையால், என்னுள் முடங்கிவிட்டன. அங்கு நான் பெற்ற நட்பு மலர் ஒவ்வொன்றாக பெயர் கூற ஆசைதான் இருப்பினும், இயலாமையால் மனதுக்குள்ளே, அடிக்கடி நினைவுப் படுத்திக் கொள்கிறேன்.
நிழல் கொடுத்தது வெறும் பயிற்சி மட்டும் அல்ல, கூடவே ஒரு பிரிவையும்தான். நிழலின் நிழலில் கடந்த நாட்கள் நெஞ்சம் மறவா பனித்துளிகள்.

தோழமையுடன்
- பழனி ஷஹான்